|
செல்வி. ஜெ.ஜெயலலிதா
தமிழ் திரையுலகில் 1964களில் தனது பாதத்தை பதித்த நடிகை ஜெயலலிதா தமிழக அரசியல் வானில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். ஜெயலலிதா திரையுலகில் மட்டுமல்ல, அரசியல் அரிச்சுவடியையும் கற்றுத் தேர்ந்து வருவதற்கு முன், அவர் நடந்து வந்த கரடு முரடான பாதைகள் ஏராளம், ஏராளம்! நான் நடிகையாக வந்திராவிட்டால், ஒரு ஆங்கில இலக்கியவாதியாக மாறியிருப்பேன் என்று ஜெலலிதாவே வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ஜெயராம்-சந்தியா (என்ற) வேதா தம்பதியரின் இரண்டாவது மகள் ஜெயலலிதா. 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதாவின் அண்ணன் பெயரும் ஜெயராம். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்த ஜெயலலிதாவின் தந்தை மைசூர் அரண்மனையில் வேலை பார்த்து வந்தார். மைசூரில் ஜெயலலிதா பிறந்தார். சிறுவயதிலேயே அவரது தந்தை மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து சென்னை பட்டணத்தில் அடியெடுத்து வைத்த வேதா (ஜெயலலிதாவின் தாயார்) திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
ஜெயலலிதா சென்னை சர்ச்பார்க் கான்வென்டில் படித்துக் கொண்டிருந்தார். நடிப்பில் தனக்கு ஆர்வம் இருந்ததில்லை என்று ஜெயலலிதாவே ஒப்புக் கொண்டிருக்கிறார். தன் தாயார் சந்தியா நடிக்கும் பட ஷ§ட்டிங்கைப் பார்க்க கூடசெல்வதில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஜெயலலிதா நடித்த முதல் படம் வெண்ணிற ஆடை. அப்போது அவருக்கு பதினெட்டு வயது கூட ஆகவில்லை. சித்ராலயாவின் இரண்டாவது படமான வெண்ணிற ஆடை படத்தின் கதை, வசனங்களை டைரக்டர் ஸ்ரீதரே எழுதியிருக்கிறார். படத்தின் கதாநாயகி ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, ஆஷா ஆகியோரும் புதுமுகங்கள்தான். பாடல்கள்- கண்ணதாசன், இசை- விஸ்வநாதன் ராமமூர்த்தி.
1964-ல் ஜெயலலிதா நடித்த முதல் தமிழ் படமான வெண்ணிற ஆடை 1965-ல் போட்டோலீசானது. ஆனால் வெண்ணிற ஆடை வெளிவருவதற்கு முன்பே 1964 நவம்பர், டிசம்பரில் சின்னதே கொம்பே, மானே அலியா ஆகிய இரண்டு கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார் ஜெயலலிதா. 1966 களில் ஜெயலலிதா 23 திரைப்படங்கள் நடித்து முடித்திருந்தார். முன்னனி நட்சத்திரங்கள் பட்டியலில் ஜெயலலிதாவுக்கு முக்கிய இடம். 1966 பொம்மை இதழில் ஜெயலலிதா தனது சுயசரிதையை அழகுற விவரித்திருந்தார். அப்போது தீபாவளி முடிந்து இருபது நாட்கள் கடந்திருந்தது. வணக்கம். இது சாதாரண வணக்கமல்ல. தீபாவளி வாழ்த்துடன் கூடிய வணக்கம்! கல்யாணம் கழிந்த பின் மேளம் எதற்கு? தீபாவளி கழிந்து இருபது நாட்களுக்கு பின் ஏன் இந்த வாழ்த்து? என்று உங்களில் சிலராவது நிச்சயம் கேட்பீர்கள். பள்ளிக்கூடத்தில் நான் ஆங்கிலத்திலும், சரித்திர பாடத்திலும் புலி. புலி என்றால் சாதாரண புலி அல்ல. பதினாறு அடி வேங்கைதான். எங்கள் பள்ளி இருக்கிறதே, அது பாடம் சொல்லி தருவதில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல. நடனங்கள், நாடகங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் தனிப் பெயர் உண்டு. நாட்டிய நிகழ்ச்சியில் என் ஆட்டமும் இருக்கும். ஜெயா, இன்றைக்கு உன் நாட்டியம் பிரமாதம் என்ற நற்சான்றிதழோடுதான் வீட்டுக்கு திரும்புவேன். என் தாயார் என்னை கட்டி அணைத்து கொள்வார். கன்னத்தில் ஒரு இச் விழுந்துவிடும். சர்ச் பார்க்கில் நான் படித்து வந்தபோது என் தயார் பல படங்களில் நடித்து வந்தார். காலையில் நான் எழுந்திருப்பதற்காக முன்பே அவர் போய் விடுவார். சில நாட்களில் நான் படுத்து தூங்கிய பின்பே படபிடிப்பு முடிந்து வீட்டுக்கு வருவார். அவர் சினிமாவில் நடிப்பதற்காக ஷ§ட்டிங் செல்கிறார் என்று தெரிந்தும் அம்மா இன்று என்ன படப்பிடிப்பு? என்ன காட்சி? நானும் ஒரு நாள் உன்கூட ஷ§ட்டிங் பார்க்க வரட்டுமா? என்றெல்லாம் ஒரு நாளாது நான் கேட்டதில்லை. எனக்கென்னவோ சினிமா பிடிப்போ ஏற்படவேயில்லை. பள்ளிக்கு போவேன். வருவேன். அல்லது வீட்டில் இருக்கும்போது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பக்க ஆரம்பித்து விடுவேன் இல்லாவிட்டால் எதையாவது எழுத ஆரம்பித்து விடுவேன். இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் சுமாராகவே எழுதுவேன். ஒரு சமயம் என் ஆங்கிலக் கட்டுரை ஒன்று பம்பாயிலிருந்து வெளியாகும் இல்லஸ்ட்ரேட்டர் வீக்லி என்ற ஆங்கில பத்திரிகையில் சிறுவர், சிறுமியர் பகுதியில் பிரசுரமாகி பாராட்டு கடிதமும் வந்தது
அந்த கடிதம் வந்த அன்றைய தினம் பூராவும் நான் என் மனதில் பெர்ல் பெக் மாதிரி என்னை ஒரு பெரிய கதாசிரியராகவே நினைத்துக் கொண்டேன். அனால் ஒன்று மட்டும் சொல்வேன். நான் மட்டும் சினிமாவில் நடிக்க வராமலிருந்திருந்தால், இலக்கியத்தில் ஒரு டாக்டர் பட்டம் பெறவே முயற்சித்திருப்பேன். இலக்கியத்தில் எனக்கு அத்தனை ஈடுபாடு உண்டு. ஆனால் இப்போது படிப்பதற்கு நேரமில்லாமல் தவிக்கிறேன். எப்போதும் பட ஷ§ட்டிங் என்று போய் விடுகிறேன். எனக்கு பதிலாக என் தாயார் வீட்டில் புத்தகங்களை படித்து வருகிறார். ஏற்கனவே பள்ளியில் நான் படிக்கும்போதே பரத நாட்டியமும் ஓரியன்டல் நடனங்களையும் பயின்று வந்தேன். என்னுடைய பரத நாட்டிய ஆசிரியை கே.ஜே.சரசா, ஓரியன்டல் நடன மாஸ்டர் திரு.சோப்ரா. என் பரதநாட்டிய அரங்கேற்றம் மயிலையில் நடைப்பெற்றது. அரங்கேற்றத்திற்கு தலைமை வகித்து தங்கச் சிலை ஜெயலலிதா என்று என்னை அழைத்து ஆசி வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். ஒருநாள் என் குடும்பத்திற்கு வேண்டிய நெருங்கிய நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஐரோப்பிய படக் கம்பெனி ஒன்றின் கூட்டுறவோடு, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், டாக்குமென்டரி படம் ஒன்று எடுக்க திட்டமிட்டிருக்கிறார் இவர், ஆங்கில படமான இதில் ஜெயலலிதாவும் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம் என்று சொல்லி தன்னுடன் அழைத்து வந்திருந்த நண்பரையும் அறிமுகப்படுத்தினார்.
அவர்தான் திரு.வி.வி.கிரி அவர்களின் குமாரர் திரு.சங்கர் கிரி. அவர்கள் அப்போது கேரளா கவர்னராக இருந்தார். என் தாயாருக்கோ என்னை சினிமாவில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ துளிக்கூட கிடையாது. பள்ளிக்கூடம் போகிறாளே படிப்பு கெட்டுவிடுமே என்று சொல்லி பார்த்தார். ஆனால் நாங்கள் சனி, ஞாயிறு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் படம் எடுத்துக் கொள்கிறோம் படிப்புக்கு ஒன்றும் தடை ஏற்படாது என்று உறுதி அளித்தார்கள்.அந்த படம் தான் எபிசிங் என்ற ஆங்கில படம். போகபோகத்தான் இதன் உண்மைகளும் எங்களுக்கு தெரிய வந்தன. டாக்குமென்டரி என்ற பெயரில் ஒரு முழு நீளப் படத்தையே அவர்கள் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு சில நாட்கள் கலந்து கொண்டால் போதும் என்ற நிபந்தனைக்கு அர்த்தமே இல்லாமல் பல நாட்கள் நான் சென்று நடிக்க வேண்டியதாயிற்று. ஒரு சமயம் பரீட்சை சமயத்தில் கூட இதில் போய் நடித்து விட்டு வந்தேன் தவிர எங்கள் கைச் செலவிலேயே நாங்கள் படப்பிடிப்புக்கு போகும்படி ஆகிவிட்டதுடன், அதில் அணிய வேண்டிய உடைகள், அணிகள் எல்லாவற்றையும் நானே என் சொந்த செலவில் வாங்கிக் கொள்ளும்படியாகிவிட்டது. எனக்கு ஒரே கோபம், ஆத்திரம். ஆனால் பாதியில் நிற்பானேன் என்று என் தாயார் என்னை சமாதானப்படுத்தி விட்டார்.
|