|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

போலி

பர்வதவர்த்தினி

சின்ன ஸ்லேட்டில் சில தத்துவ வாசகங்களை எழுதி தினமும் அதை வீட்டின் முன்பாக மாட்டி வைப்பது பரசுவின் வாடிக்கை. அன்றைய வாசகத்தை அவர் எழுதிக் கொண்டிருந்தார்.

எதிலும் போலித்தனம் எதற்கு? யாருக்கோ அஞ்சி அழுவதுபோல் நடிப்பதும், யாருடைய திருப்திக்காகவோ சிரிப்பதுபோல் ஜாலம் காட்டுவதும் எதற்காக? நிஜமாக அழவேண்டியதற்கு மட்டும் அழுங்கள். சிரிக்க வேண்டியதற்கு பலமாக வாய்விட்டு சிரியுங்கள்.
எழுதி வைத்ததை மனைவி கமலியிடம் படித்துக் காட்டினார். அவள் சிரித்தாள். பிறகு-

நானும் ரொம்ப நாளா கேட்கிறேன். யார் இதையெல்லாம் படிக்கப் போறாங்க? யாருக்காக எழுதறீங்க?என்று கேட்டாள்.

நான் நினைப்பதை நானே எழுதிப் பார்த்துக்கிறேன். நான் யாரையும் பாக்கச் சொல்லலியே?

அப்ப ஏன் வெளியே கொண்டு போய் மாட்றீங்க? வீட்டு டத்துல தொங்க விடுங்களேன்.

யாராவது ஒருத்தர் படிச்சு இது தப்பு, அது சரின்னு சொல்ல மாட்டாங்களான்னு ஒரு ஆசைதான்.

எனக்கென்னவோ அப்படி தோணல. உங்களுக்கு விளம்பர ஆசை......

நிச்சயமா அப்படியில்ல கமலி. யாராவது என் எண்ணத்தையும், கருத்தையும் பகிர்ந்துகொண்டு விமர்சனம் செய்தா போதும். நான் வெளிய மாட்டற விவகாரத்தை விட்டுடுவேன். அது போகட்டும் இன்றைய வாசகம் எப்படி?

பலே ஜோர். கொண்டுபோய் மாட்டுங்க.

பரசு கரும்பலகையுடன் வெளியே வந்து அதை சுவர் ஆணியில் தொங்கவிட்டார். யாரோ வந்தார். கரும்பலகையை மறைக்காமல் பரசு ஒதுங்கி நின்றார். வந்தவர் அதை பார்க்கவே இல்லை. வந்த சேதியைச் சொன்னார். உங்க நண்பர் கோபாலன் திடீர்னு வாயை பிளந்துட்டாருங்க...... சொன்னவரின் முகத்தில் ஒரு உணர்ச்சியும் தெரியவில்லை. சொல்கிற தோரணையில் கூட ஒரு வருத்தம் தொனிக்கவில்லை. அவர் நகர்ந்தார். முதலில் அவர் மீது பரசுவுக்கு கோபம் வந்தது. உடனே அது தணிந்தும் விட்டது. அவர் நினைத்தார்.......... சற்று முன் நான் எழுதி வைச்சது சரின்னா, இப்ப இவர் செய்ததும் சரி. இவர் வெறும் சேதி சொல்ல வந்தவர். செயற்கை கண்ணீருடன் முகத்தை இயல்புக்கு மாறாக இறுக்கமாக வைத்து கொண்டு இயற்கை எய்தின செய்தியை கூறாமல், இயல்பாக போலித்தனமின்றி சகஜமாக சொல்லிவிட்டு போய் விட்டாரே! தப்பில்ல தான். கமலியோடு கோபாலனின் வீட்டுக்கு போனார்.

அதற்குள் கூட்டம் கூடியிருந்தது. கோபாலனின் உடலை பார்த்த பரசுவுக்கு கண்ணீர் பெருகியது. அருகில் நின்ற கோபாலனின் மகன் விஸ்வத்தை அணைத்து அழுதபடி ஆறுதல் சொன்னார். ஆனால் அவனோ, அழாமல் திடமாக நின்றான். அழக்கூடாது என்கிற அழிச்சாட்டிய எண்ணம்கூட இருக்கும் போல் தோன்றியது. பரசுவுக்கு இது வியப்பை தரவில்லை.

கோபாலனுக்கும் விஸ்வத்துக்கும் உறவில் ஓர் விரிசல். கோபத்தில் வீட்டை விட்டு போன விஸ்வம் இப்போதுதான் வந்து நிற்கிறான்.கடைசியாக அப்பா ஏதாவது சொன்னாரா?

இல்ல,அன்னிக்கு கோபத்தில கத்தினதுதான் கடைசி. இப்போ அடங்கி போச்சே விஸ்வம். இல்ல சார். அடங்குறதுன்னா உயிர் உள்ளபோதே அடங்கினாதான் உண்டு. இப்போ அடங்கினது கோபமில்லை உயிர்! அவனது பேச்சு அவனது கோபத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.

அழனும். அழாம இருக்கக்கூடாது........ என்று யாரோ ஒரு பெண்மணி கூட்டத்திலிருந்து சொன்னது பரசுவின் காதில் விழுந்தது. விஸ்வமும் கேட்டிருப்பான். பரசுதான் பதில் சொன்னார்.

மனுஷனுக்கு அழுகை தன்னால வரணும். அப்பா போன துக்கம் இவனுக்கு இல்ல. அழுகையும் அதனால வரல. போலித்தனமாக எதுக்கு ஒருத்தன் அழனும்? தேவையே இல்ல. சடங்கு செய்ய வந்திருக்கானே அதுவே பெருசு! என்றார் உரக்க. இறுதி யாத்திரை தொடங்கியது. பரசுவும் கூட்டத்துடன் நடந்தார். மனசு நெருடிக்கொண்டே வந்தது.

விஸ்வத்திடம் சமயம் வருகிறபோது ஈட்டியால் குத்துவது போல் கேட்டு விடனும். அதெப்படி ஒரு பிள்ளைக்கு அழுகைக்கூட வராமல் போகும்? அப்படி என்ன கோபமும் வன்மமும்? கண்ணில் நீர் வற்றுகிற அளவுக்கு வெறுப்பு, நெஞ்சைப் பஞ்சில் துடைத்து
விட்டதா? இறுதி கடனை மட்டும் இவன் எதுக்காக செய்யனும்? கோவிந்தா கொள்ளி போட்டுட்டு போறோம்? தனியாக பேசாமலா போவான்? அப்போது வைத்துக் கொள்கிறேன்............

பரசுவுக்கு ஆறவில்லை.

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு விஸ்வம் திரும்பி வந்து கொண்டிருந்தான். பக்கத்தில் பரசு. இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அவனுடைய முகத்தை பார்க்க வேண்டும் போலிருந்தது பரசுவுக்கு. பார்த்த அவருக்கு ஒரே அதிர்ச்சி. இப்போது அவன் கண்ணில் நீர் வழிய வந்து கொண்டிருந்தான்.
பரசு இதை எதிர்பார்க்கவே இல்லை. அழாதே! துக்கம் உனக்கு இத்தனை நேரம் கழித்தாவது உறைத்ததே! என்று தேற்றினார்.
அவன் மேலும் கேவினான்.

எனக்கு என் பழைய அப்பா தெரிகிறார். விஸ்வத்தை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று சற்று முன்பு வரை நினைத்த அவர்
திகைத்தார். ஈரமே இல்லாத அவனுடைய நெஞ்சில் உதிரம் கொட்ட வைக்க வேண்டும் என்றுகூட சபதமிட்டிருந்தார். ஆனால் எதற்கும் அவன் வாய்ப்பே தராமல் அழுது விட்டான். பரசுவுக்கும் படபடப்பு அடங்கத் தொடங்கியது.

கோபாலா! உன் ஆத்மா இப்போது அமைதியாகி இருக்குமே! என்று மனசுக்குள் உரக்க சொல்லி கொண்டார். வீடு வந்ததும் விஸ்வம் கூறினான். சார் அப்பாவின் போட்டோயங்களை ஒழுங்காக
செய்துவிட முடிவு செய்திருக்கிறேன்.............. தன்னுடைய வீட்டிற்கு திரும்புகிறபோது இந்த அதிசயத்தை கமலியிடம் கூறிக்கொண்டே வந்தார் பரசு. விஸ்வம் செய்ததில் தப்பிருப்பதாக எனக்குத் தெரியல! என்றாள் கமலி.

வீடேறுகிறபோது பரசு கவனித்தார். பலகையில் எழுதிய £சகத்தில் யாரோ மாற்றம் செய்திருப்பது தெரிந்தது. சிலருக்கு வாழ்க்கையே
போலியாகிவிடுகிறபோது இந்த அழுகை-சிரிப்பு எல்லாமும் போலிதான் அதை மட்டும் ஏன் மாற்ற முயல வேண்டும்? வீட்டிற்குள் நுழைய மனமில்லை பரசுவுக்கு. அந்த மாற்று சிந்தனையை மீண்டும் மீண்டும் படித்தார். அதை கழற்றி உள்ளே கொண்டு போனார். சில நாட்களாகப் புதியதாக எதையும் அவர் எழுதவில்லை. எழுத கையும் வரவில்லை.

 

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter