|
நேற்றும் நடந்தது
சுப்ரஜா
கருக்கல் இன்னமும் கலையவில்லை. குளித்தது போதும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது. கலைச்செல்வி மறுபடியும் தண்ணீரில் மூழ்கி எழுந்தாள். விடியலுக்கு முன் காவிரித்தண்ணீரில் உடல் நனைப்பது ஒரு இதம். அந்த இதம் கலைச்செல்விக்கு சுகமாய் மனசையும் வருடியது.
படியிறங்கி தண்ணீர் படியில் முதலில் கால் வைக்கும்போது ஜில்லிப்பு உடல் தாண்டும். எலும்பை லொட லொடக்க வைக்கும். உடைகள் குறைத்து மார்பு வரை பா¬வாடையை இழுத்து இறுக்க கட்டிக்கொண்டு ஒரு முறை கழுத்துவரை தண்ணீரில் சற்றே நின்று பரக்கென்று மூழ்கி எழுந்தாள். உடல் முழுக்க ஒரு சுகம் பரவும். படித்துறையில் நின்று தலை துடைத்தவள் எலுமிச்சங்கா பாளைய பாலம் பார்த்தாள். துவரங்குறிச்சி மோர்க்காரி கூடையுடன் கிளம்பி விட்டாள். விடியலுக்கு முன்னே புறப்படும் உதயம்!
புடவையை உடல் முழுக்க சுற்றிக் கொண்டவள் படியில் பிழிந்து வைத்திருந்த துணிகளை எடுத்து வாளியில் அடைத்துக்கொண்டாள். சோப்பு பெட்டியை மேல் வைத்து பிடி பற்றி கிளம்பினாள். ஆற்றுத் தெரு தாண்டி கீழ் தெருவில் நுழைந்தாள். டீக்கடையில் பாய்லரை ரெடி பண்ணிக்கொண்டிருந்த அசோகன் அங்கிருந்தே அவள் மேல் பார்வையை அலைய விட்டு சிரித்தான். அலட்சித்தவள் வெளிப்புறம் பூட்டியிருந்த பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அப்பாவின் அறைக்குள் எட்டிப்பார்த்தாள். இன்னமும் எழுந்திருக்கவில்லை. காலை வேலைகளை ஆரம்பித்தாள். அவளையும் அறியாமல் மனம் அவளை தாராசுரம் பற்றியிழுத்தது. இன்று வியாழக்கிழமை. பள்ளித்தோழி வனஜா திருவாடுதுறை பெரியப்பா வீட்டிற்கு போயிருப்பாள். ரமேஷ் தனியாய்தான் இருப்பான். காதுகள் குறுகுறுக்க மார்பு கூட்டோடு விம்மித்தணிந்து வசப்படுதல் இயற்கை. முதல்முறை அவனைப் பார்த்த போதே வசப்படும் ரசாயன மாற்றம் நிகழ்ந்துதான் விட்டது.
கலை, இதுதான் என் அண்ணா ரமேஷ்! ஹலோ... என்றாள் சம்பிரதாயத்திற்கு.
நைஸ் மீட்டிங் யூ- என்றான் அழுத்தம் திருத்தமாய். அவனின் தொனியே வேறுமாதிரியிருந்தது. அவன் வேறு அறைக்குள் புகுந்து கொண்ட பின்னும் அங்கேயே நிலைகுத்தியிருந்தாள். நெடு நெடுவென்றிருந்த அவனின் உயரமே அவள் மனதில் கனப்பொழுதில் படிமமாக-
என்னம்மா... கலைச்செல்வி. காபி ரெடியா? - அப்பா வேலாயுதம் கேட்டுக் கொண்டே பல்விளக்க போனார். பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக இருந்து போட்டோடையர் ஆனவர். சிறு வயதில் அக்ரஹார தெருவில் குடியிருந்த தன் தாய்
வழிப்பாட்டி வீட்டில் வளர்ந்தவர். தெரு வாசனையோ என்னவோ... அவருக்கு காபி பழக்கம் தொற்றிக் கொண்டது.
இந்தாங்க -வந்து நின்றவரிடம் காபியை நீட்டினாலும் மனம் முழுக்க ரமேஷ் கடலலையாய். பெண்ணே... தன் வயப்படலை சொல்லலாமா... தவறா... ம்ஹ§ம். தவறென்று யார் சொன்னது? சொல்ல முன்னுரிமையில்லையா? தான் எப்போதோ அவனை காதலிக்க ஆரம்பித்துவிட்டதை மனம் மறுக்கவில்லை. நெஞ்ச குறுகுறுப்பு நீடிக்க-
அப்பா...
ம்...
வீட்ல தனியா இருந்து ரொம்ப போரடிக்குது. தாராசுரத்தில என் பிரண்டு ஒருத்தி இருக்காளே... அவ வீட்டுக்கு போய்ட்டு வரலாம்னு பார்க்கறேன்.
யாரு.. வனஜாவா?
ஆமாம்பா...
எப்ப போகப் போறே?
பதினொரு மணிக்கு... நாலு மணிக்கு திரும்பிடுவேன்.
பத்திரமா போய்ட்டு வாம்மா...
சரிப்பா...
லேடீஸ் சைக்கிளை மிதித்து தாராசுரத்திற்குள் நுழைந்தவளுக்கு நெஞ்சம் படபடத்தது. மார் கூட்டுக்குள் ஓயாத சிட்டுக்குருவி இம்சை! ராதாரவி குரலில் எவனோ சினிமா வசனத்தை கத்திக்கொண்டு போக, குதிரை வண்டியிலிருந்து நோட்டீஸ் கற்றையாய் வெளிவந்து காற்றில் உதிர்ந்து பிரிந்து பறந்தது. சின்ன பையன்கள் காற்றில் மடிந்து மடிந்து இறங்கிய நோட்டீசுக்கு போட்டி போட- பொஸ்ஸா பொல்டி என கறிக்காரன் சைக்கிள் மணியடித்து கடந்தான்.
அப்பாவிடம் வனஜாவை பார்க்க என்று பொய் சொல்லி வந்தாலும் பாழாய்போன மனசு இப்படி கிடந்து அடித்துக் கொள்கிறதே...? வெயில் சற்று கடுமையாய் இருந்தது. விடாமல் சைக்கிள் மிதித்து வந்ததில் வியற்வை வேறு கசகசவென்று. ஜாக்கெட்டும் நனைந்து விட்டிருந்தது. திவலையாய் நீர் காதோரம் முடிக்கற்றை பற்றி இறங்கியது. வனஜாவின் வீடு நெருங்க நெருங்க குடை ராட்டின குழந்தை போல் ஆனாள் கலைச்செல்வி. வீடு வர- சைக்கிளை ஓரமாய் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள். கதவை தட்ட-
யாரு... - என்று உள் குரல்.
ஒன்றும் பதில் சொல்ல தோன்றாமல் நின்றாள். ரமேஷின் குரல்தான். ஒன்றும் சொல்ல தோன்றாமல் நின்றாலும் ஏதாவது பேசேன் என்று உள் மனசு சற்று உரக்கவே கட்டளையிட- நான்தான் என்றாள் அவளுக்கே போட்டோதான மெல்லிய குரலில். அந்த குரல் காற்றில் மந்திரத் துகளாய் விரவி உள் போயிருக்க வேண்டும். தட தடவென்று தரை அதிர ஓடி வந்தான் ரமேஷ். அவனும் கள்ளன்! திறந்தவுடன்-
வனஜா இல்லையே... -என்றான். இமை படபடத்தாள் கலைச்செல்வி.
வனஜா இப்ப இல்லைன்னா திரும்பியே வரமாட்டாளா என்ன... நான் உள்ள வரக்கூடாதா? அவ திரும்பற
வரைக்கும் இப்படி வெயிலில் காயணுமா..?
அதிரடியாய் கலைச்செல்வி அடுக்கிக்கொண்டே போக ரமேஷ் லேசாய் தடுமாறினான். அவனின் படபடத்தலையும் தடுமாற்றத்தையும் ரசித்தாள். கதவைத்திறந்து விட்டான்.
உள்ளே வாங்க....
சுவாதீனமாய் உள்ளே நுழைந்தவள் வனஜாவின் அறைக்கு போனாள். நாற்காலியை நடு அறைக்கு தள்ளிபோட்டு உட்கார்ந்தாள். வாசல் கதவை உள்புறம் தாளிடும் ஓசை. அறை வாசலில் ரமேஷ் வந்து நிற்பதை ஜாடையாய் கவனித்தாள்.
எப்ப வருவா வனஜா?
கலைச்செல்வி... அடுத்த வாரம் வியாழக்கிழமை பெரியப்பா வீட்டிற்கு போக போகிறேன். நைட்தான் திரும்புவேன். -வனஜா அப்போது சொன்னது மனதுள் மோதியது. அவள் பார்க்க வந்தது உண்மையிலேயே வனஜாவையா என்ன?
எப்ப வருவா வனஜா? - மறுபடியும் கேட்டாள். தெரியலையே... - என்றான். பொய்யோ..? சினிமாவில் மட்டும் எவ்வளவு எளிதாக காதலை சொல்கிறார்கள். சொல்.... என்று மனசு சொன்னாலும் ஏதோ எங்கோ பிடித்திழுத்தது.
வேண்டுமென்றே சீண்டினாள்...
ஏன் அங்கேயே நிக்கறீங்க.. உங்க வீடுதானே..?
வீடு எங்களுதா இருந்தாலும் உள் அறையில இருக்கிறது..... ரமேஷ் இழுத்தான்.
என்ன ரமேஷ்... பேங்க் போஸ்டிங் என்னாச்சு... -பேச்சு வழுக்கி தடம் மாறியது. இன்னும் லெட்டர் வரலை...-அங்கிருந்தபடியே பதில் சொன்னான்.
என்ன ரமேஷ். இன்னும் என்ன? இது ஸ்டார் டி.வி யுகம்.... அறை வாசலில்தான் நிக்க போறீங்களா?
ஓ... எல்லாம் டைம் ஸ்டைல் வேகம் தானா? -இது ரமேஷ்! அவன் சொன்னது காம்ளிமெண்டா,
கிண்டலா?
வெளயாட்டு போதும் ரமேஷ். உள்ள வா, இப்படி கட்டிலில் உட்கார். உங்கிட்ட தனியா பேசணும்னுதான் மாங்கு மாங்குன்னு சைக்கிளை மிதிச்சுண்டு வந்திருக்கேன்.
பேச மட்டும்தானா...?
உள்ளே வந்த ரமேஷ் கட்டிலருகே நின்று கேட்க தலைகுனிந்தாள். அவன் கேட்ட கேள்வி,
சொல்லிவிடு.... என்று உள்ளுக்குள் அரற்றிய கலைச்செல்வியின் குரல்வளையை பிடித்தாற் போல் ஆனது. விருட்டென எழுந்தாள். ரமேஷ் கட்டிலில் உட்காராமல் அவளருகே வந்து நின்றான். மிக அருகில் அவன் வந்து நின்றதும் வெடவெடத்தது அவளுக்கு.
முகத்தில் மெல்லிய புன்னகை கீற்றுடன் பேசத்தானா? என்று மறுபடியும் கேட்டான். அவன் சாதாரணமாய்ச் சொன்னாலும் சுரீரென்று எங்கேயோ வலித்தது கலைச்செல்விக்கு. உள்ளுக்குள் சலனமில்லாமல் நேசித்தாலும் வெறும் வெப்ப நட்பு என கிறுக்கன் நினைத்துக் கொண்டானே என்ற ஆதங்கம் அரக்கியாய் உள்ளே எழ - மனசு வெடித்து, இமையோரம் நீர் சேர்ந்தது.
என்ன? என்றான் வெப்பமாய்.
ஒண்ணுமில்லை
நாற்காலி நகர்த்தி கிளம்பினாள்
வனஜா வந்தா வந்திட்டு போனேன்னு சொல்லுங்க வேகமாய் வெளி வந்தவள் கழுத்தோரம் வியர்வையை இழுத்து சுண்டினாள். சைக்கிளை கிளப்பி வேர்க்க விறுவிறுக்க மிதித்து முன்னேறினாள். ஒரு வெறுமை மனம் எங்கும் முட்டியது. மீன் குளத்தில் தபார், தபாரென சிகடா பையன்கள் குதித்துக் கொண்டிருக்க, நீர் வளையம் வளையமாய் விரிந்து குளக்கரையில் முட்டி மறைந்தது.
|