|
அத்தியாயம் 1
இ.எஸ்.லலிதா
எழுதும்
எனக்கே வேண்டும் நீ
தொடர் கதை
மாலை ஐந்து மணி!
சாந்தினி முகம் களைத்திருந்தாள். சன்னமான வியர்வைகள் நெற்றியில் பூக்க, ஒரு வித அயர்ச்சியுடன் ஆபிஸை விட்டு வெளியே வந்தாள். மரநிழலில் நிறுத்தியிருந்த டூவீலரில் சாவியை நுழைத்தாள்.
சா....சாந்தினி.....!
திரும்பினாள். கிருஷ்ணா நின்றிருந்தான். இவன் எதற்கு இங்கு வந்தான்? இனியும் இவனோடு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? யார் நீங்க என்ன வேணும்? மேட்டர் ஏதாவது கொடுக்கிறதா இருந்தா ஆபிஸ்ல போய் கொடுத்துட்டு போங்க.. குரலில் கூடுதலாய் கடுமையை சேர்த்துக் கொண்டாள்.
சாந்தி ப்ளீஸ் வார்த்தைகளால் என்னை கொல்லாதே. ஒரு அரைமணி நேரம் டைம் ஒதுக்குவாயா? உன்னோட கொஞ்சம் பேசணும். கிருஷ்ணாவின் கண்களில் கெஞ்சலும்., வேண்டுதலும் இருந்தது. முகத்தில் ஒரு வார தாடி.
ஸாரி நான் யாரோடையும் பேச விரும்பவில்லை. கொஞ்சம் வழி விடறீங்களா? டைமாச்சு.
என் குழந்தை ஸ்கூல் வாசல்ல காத்துக்கிட்டு இருக்கும்....
நம்ம குழந்தைன்னு சொல்ல மாட்டியா?
சாந்தினி அவனை சுட்டு விடுவது போல, சடாரென திரும்பி முறைத்தாள். மிஸ்டர் கிருஷ்ணா....... நம்ம குழந்தைன்னு போட்டோமை கொண்டாடறதுக்கு உங்களுக்கு தகுதியும் இல்ல, அதற்கான பந்தமும் இப்ப இல்ல, நாம சட்டபடி பிரிஞ்சிட்டோம்! நீங்க யாரோ....... நான் யாரோ......
கொதிக்கும் நீராய் வார்த்தைகளை பிரயோகித்து விட்டாலும், சாந்தினிக்குள்ளும் அந்த கேள்வி எழுந்தது. அவன் யாரோ நான் யாரோவா? என்னால் கூட இப்படி பேச முடியுமா? இதே மூன்று
வருடங்களுக்கு முன் இப்படி பேசுவோமென்று எண்ணியிருப்போமா? அப்போதைய கொஞ்சல் என்ன? காதல் என்ன? ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது.
சாந்திமா....ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன், மேலும் மேலும் என்னை ரணப்படுத்தாதே.....! நான் உனக்கு பண்ணிய கொடுமைக்கு நிறைய அனுபவிச்சிட்டேன். அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க. பிஸினஸ்லேயும் ஏகப்பட்ட நஷ்டம். பிரண்ட்ஸெல்லாம் கைவிட்டு... இருந்த ஒரே வீட்டையும் வித்தாச்சு. நாய் மாதிரி இப்ப நடுத்தெருவுல நிற்கிறேன்! எனக்கு இப்பதான் உன்னோட அருமை போட்டோயுது... ப்ளீஸ்.... ஒரு அரைமணி நேரம் அட்லீஸ்ட் பத்து நிமிடமாவது உன்னோட மனம் விட்டு பேசணும்.....
ஓஹோ! இப்போது கூட மனைவி என்ற அன்பில் பேச வரவில்லை. பிஸினஸ் நொடிந்து போய் விட்டது. தாய் போய் விட்டாள். மற்றவர்களும் போய் விட, யாருமற்ற நிலையில் நிற்கதியாய் நிற்கும்போது என் ஞாபகம் வந்ததோ?
சாந்தினி பதிலேதும் சொல்லாமல், பார்வையால் அவனை விலக்கினாள். வண்டியை கிளப்பினாள். சிறிது தூரம் சென்றவுடனேயே தலை தானாக திரும்பி அவனைப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. எப்படி இருந்தவன் இப்போது உடம்பு ஒட்டிப்போய், கன்னங்கள் உள்வாங்கி, கண்களெல்லாம் சோர்ந்து போய் இருக்கிறான். அன்று அந்த கண்களின் கவர்ச்சிக்கு மயங்கிதானே இவனை காதலித்தேன்?
ஆனால் இன்று......?
கிருஷ்ணாவின் மேல் மெலிதான இரக்கம் தோன்றியது. அழுகை வரும்போல் இருந்தது. பெண் ஜென்மம் எப்போதுமே இப்படிதானோ? அதற்கு துரோகிகளை மன்னிக்கும் மனப்பான்மை அதிகமோ? மனப்போராட்டங்களோடு ஸ்கூல் வாசலில் கொண்டு போய் வண்டியை நிறுத்த, வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்த குழந்தை ப்ரியா, இவளைக் கண்டதும் ஓடி வந்து வண்டியில் ஏறிக்கொண்டாள். அவளது பையை வாங்கி வண்டியின் முன்புறம் மாட்டியவள், நேராக வண்டியை வீட்டிற்கு செலுத்தினாள்.
வண்டி மந்தவெளியை தாண்டி, அடையார் சிக்னலை நெருங்கிக் கொண்டிருக்கும் போது, குழந்தை அந்தக் கேள்வியைக் கேட்டது. ஏம்மா உடம்பு சரியில்லையா? திடுக்கிட்டு போனாள் சாந்தினி.
வழக்கமாய் ப்ரியா வண்டியில் ஏறியதும், மதியம் மிச்சம் வைக்காம சாப்ட்டியா? மிஸ் என்ன ஹோம் ஓர்க் சொன்னாங்க? ப்ரண்ட்ஸோட சேர்ந்து விளையாடினியா? இப்படி ஏகப்பட்ட கேள்வி கேட்கும் சாந்தினி இன்று ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை என்றால் எந்த குழந்தைக்குத்தான் கேட்கத் தெரியாது...... அதுவும் ஐந்து வயது ப்ரியாவுக்கு!
என்ன மம்மி... எதுவுமே பேசமாட்டேங்கிறீங்க? குழந்தை மீண்டும் கேள்வி கேட்டுவிட்டு அம்மாவின் முகத்தை திரும்பிப் பார்க்க முயற்சித்தது.
லேசா தலை வலிக்குதுடா! அம்மாவுக்கு ஆபிஸ்ல நிறைய ஒர்க்.... டயர்டா இருக்கேன். அதான் பேசாம வரேன்....! நீயும் சமத்தா பேசாம வா கண்ணு..... இருக்கும் குழப்பத்தில் குழந்தையிடம் ஏதாவது உளறி விடுவோமோ என்று பயந்து தலைவலி என்று பொய் சொல்லி வைத்தாள்.
அதன் பிறகு வீடு வந்து சேரும் வரை ப்ரியா பேசவே இல்லை.
Next
page..... |