இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 22.09.2011 தேதியிலிருந்து சென்னை கோயம்பேடு பகுதியில் மரண தண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக தொடர் பட்டினி போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பினர் மரண தண்டனையை எதிர்த்து உண்ணவிரதத்தில் பங்கேற்று வருகின்றனர். முதல் நாளில் சென்னை வழக்கறிஞர்கள் சங்கமும், இரண்டாவது நாளில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையும், மூன்றாவது நாளில் புதிய தமிழகம் கட்சியும், நான்காம் நாளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகமும், ஐந்தாம் நாளான இன்று (26.09.2011) கொங்கு பேரவை விவசாயிகள் கூட்டமைப்பு பங்கேற்று தங்கள் பங்கிற்கான தூக்கு தண்டனை எதிர்ப்பையும், மூவர் விடுதலைக்கான ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்...
மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசியதாவது...
அற வழியிலான இந்த உண்ணாவிரதப் போராட்டம் எந்த நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது என்று இதற்கு முன்பு பேசியவர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மூலம் சரியாக உணர்த்தி விட்டனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக பங்கேற்கவில்லை என்று அறிவித்ததை தமிழகம் ஏற்றுக் கொண்டது. இப்போது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு குதிரையும் தனித்தனியாக ஓடுகின்றன.
ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனக்கும் கட்சிப் பணிகள் அதிகம் உள்ளது. இதே போல சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஓட்டுவேட்டை நடத்திக் கொண்டு இருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தேன். இப்போது, 3 தமிழர்களுக்காக இங்கு போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன்.
இந்த அறப்போராட்டத்தின் நோக்கம் கண்டிப்பாக வெற்றி பெரும். பல போராட்டங்களுக்கு மத்தியில் தமிழகம் உள்ளாட்சி மன்றத் தேர்தலை சந்திக்கிறது. மரண தண்டனைக்கு எதிராக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அணலை அணையாமல் காக்க ஏராளமானவர்கள் அணிவகுத்து வருகிறார்கள்.
போராட்டத்தில் வலியுறுத்தப்படும் கோரிக்கைகள் நிறைவேறும் போதுதான் போராட்டம் வெற்றி பெற்றதாக குறிப்பிட முடியும். அந்த வகையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் அறப்போராட்டங்கள் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.
செங்கொடி அரங்கமும், மூவரையும் தூக்கிலிடக்கூடாது என வலியுறுத்தும் தோரண வாயிலும் சிறப்பாக அமைக்கப்பட்டு தொடர்ந்து பட்டினி போராட்டம் நடைபெற்று வருகிறது.
-தமிழ்தாசன்.., |