ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. தமிழகம் முழுக்க பல்வேறு அமைப்புகள் நடை பயணங்கள், பிரச்சாரம் நடத்தி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக சென்னை மெரீனா கடற்கரையில் தூக்குத் தண்டனைக்கு எதிரான மணற்சிற்ப கண்காட்சி ஞாயிறு(18.09.2011) மாலை நடந்தது. ஓவியக்கல்லூரி மாணவர்களும், பிரபல மணற் சிற்பிகளும் கலந்து கொண்டு சிற்பங்களை மணலில் செதுக்கினார்கள்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்திற்குப் பின்னால் நடைபெற்ற இந்த மணற் சிற்பங்களை ஏராளமான பொது மக்கள் கண்டு களித்தனர். இந்த நிகழ்வில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது...
கடல் அலை போலே கொந்தளித்து கொண்டு இருக்கிறது எங்களின் மனம். பட்டினியாலும், படைகளை கொண்டும், தடை செய்யப்பட்ட குண்டுகளை பயன்படுத்தியும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத்து உறவுகளை கொன்றது போதாதா ? இன்னும் ஏன் இந்த மூவரின் உயிரை கொல்லத்துடிக்கிறது மத்திய அரசு...
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் குற்றமற்றவர்கள் அவர்கள் தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழக முதல்வர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரி தீர்மானம் போட்டுள்ளார், அதே சமயத்தில் மூவரின் உயிரும் நிரந்தரமாக காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு எதிராக இருந்தால் இந்த ஒரு விசயத்தில் மட்டும் தமிழக அரசுக்கு முழு ஆதரவையும் நாம் தர வேண்டும்.
முத்துகுமார்கள் வருவார்கள், செங்கொடிகள் வருவார்கள். ஆனால் இனி தங்களின் உயிரை அளித்துக்கொள்ள மாட்டார்கள். முத்துகுமார் ஈழத்தமிழர்களை காக்க உயிர் நீத்தான், செங்கொடி மூவர் உயிரை காக்க உயிர் நீத்து இருக்கிறாள்.
போராட்டத்தை பெருகப்பண்ணுவோம், மூவர் உயிரை காக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம். இங்கே மனித தலையில் போடப்பட்ட தூக்கு கயிறு அறுந்தது போன்றும், சிங்கத்தின் கையில் தூக்கு இருப்பது போன்றும் மணற் சிற்பம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை அமைத்த ஓவியக்கல்லூரி மாணவர்களுக்கும், அவர்களை நெறிப்படுத்திய ஓவியர்களுக்கும் என் நன்றிகளையும் பாராட்டுதலையும் தெரிவைத்து கொள்கிறேன்.
மாண்டு ஒழிக மரண தண்டனை, மீண்டு எழுக தமிழ் மக்கள். மரணதண்டனை ஒழிப்போம், மனிதநேயம் காப்போம் என்று கோஷங்களை எழுப்பினார்.
மணற்சிற்பம் சிங்கத்தின் காலடியில் மூவரும் மண்டியிடுவது போல் இருந்ததது. அதை பார்த்து மூவர் மண்டியிட மாட்டார்கள், நாங்கள் தான் மண்டியிடுகிறோம். எனவே இப்படி ஒரு கருத்தை பரப்பாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் அமீர், சேரன், வ.கவுதமன், சத்யராஜ் , தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியர் ட்ராஸ்கி மருது, மதன், புகழேந்தி, சந்தானம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- தாஸ்.., |