இலங்கையில் பிறந்து வளர்ந்து தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உணர்ச்சிகவிஞர் காசி ஆனந்தன் எழுதிய காசி ஆனந்தன் நறுக்குகள் (இரண்டாம் தொகுப்பு), பொழிச்சல் (புதுக்கவிதை உரை இலக்கியமே - ஆய்வு) (பேஃபிள்ஸ் - காசி ஆனந்தன் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு) ஆகிய 3 நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தேவநேயபாவணர் நூலகத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், திரைப்பட இயக்குநர் மணிவண்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியர் வீர சந்தானம், தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி தலைவர் பெ.மணியரசன், இயக்குநர் கௌதமன், கவிஞர் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
மூன்று புத்தகத்தையும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆய்வு செய்தார். பெ.மணியரசனும் அதற்குள் இருந்த நிறைகுறைகளை விளக்கினார்.
மூன்று நூல்களையும் வெளியிட்டு வைகோ பேசியதாவது :-
காசி ஆனந்தனின் ஒவ்வொரு நறுக்குகளையும் நாம் படிக்கும் போது இலங்கையில் நடந்த கொடுமைகளும், இனபடுகொலைகளும் கண்முன்னே வந்து நிற்கின்றது. அந்த அளவுக்கு அங்கே நடந்த கொடுமையினை நறுக்குகளில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. இந்தத் தகவலை நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று விஞ்ஞானத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு சில பெரியவர்கள் பக்கம் பக்கமாக அறிக்கை கொடுத்து வருகிறார்கள். இதற்காக கரிகாலன் கட்டிய கல்லணை பாதுகாப்பாகத் தானே இருக்கிறது என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்படி அணு மின் நிலையத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பெரிய மனிதர்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தை கண்டிப்பதில்லை. தமிழகத்துக்காக குரல் கொடுப்பதில்லை. இலங்கை கடற்படையினரால் இதுவரை 600-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்தும் அந்த பெரியவர்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்றார். |