புத்தகத்தின் பெயர் : சினிமாவில் சேருவது எப்படி |
விலை : ரூ.55 |
எழுத்தாளர் :சபீதா ஜோசப் |
பதிப்பகம் :அம்மா கம்யூனிகேஷன்ஸ்
சுந்தரம் பில்டிங்,
47, ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம்,
சென்னை - 600 024. |
ஆசிரியர் சபீதா ஜோசப் எனது நீண்ட நாள் நண்பர். தலைக்கணம் இல்லாத பேனா அவருடையது. பனித்துளிகளைச் சேகரித்து ஒரு பாற்கடலையே உண்டாக்கி விடுகிற உழைப்பு அவருக்குள் எப்போதும் அலையடித்துக் கொண்டிருக்கும். தூணுக்கெழுத்தாளராய் பத்திரிக்கைகளால் புரட்டப்பட்டவர் நூலாசிரியராய் இன்று நிமிர்ந்திடுக்கிறார்.
'சினிமாவில் சேருவது எப்படி?' என்கிற இந்த நூல், சினிமாவை நோக்கி போகிற இளைஞர்களுக்கு ஒரு சின்ன வழிகாட்டி.
பத்திரிகையாளர்கள், திரைப்படக்காரர்கள், புதுக் கவிஞர்கள், இவர்களை வெளியேற்றிவிட்டால் சென்னை ஒரு கிராமமாகிவிடும். சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமாக மட்டுமில்லை; இளைஞர்களின் கலைநகரமாகவும் இருக்கிறது; கனவு நகரமாகவும் இருக்கிறது.
இங்கே படவுலகத்தின் நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிற இளைஞர்களில் பத்துப் பேர் ஜெயிக்கிறார்கள்; பத்துப் பசியாருகிறார்கள்; பல நூறு பேர் பட்டினி கிடக்கிறார்கள்.
பட்டினிக் கிடக்கிறவர்களில் பலபேர் பாடம் படிக்காமலே பரீட்சை எழுத வந்தவர்கள். இவர்கள் கனவுகளோடு சென்னைக்கு வந்து கனவுகளாகவே கலைந்துவிடுகிறார்கள். சினிமா ஆசையோடு சென்னையை முற்றுகையிடுகிற இளைஞர்களுக்கு சபீதா ஜோசப்பின் இந்த நூல் ஒரு நல்ல நண்பன்; அறைத் தோழன்.
துறைமுகம் தேடி தத்தளிக்கிற வண்ணக் கனவுகளை ஆற்றுப்படுத்துகிற அழகான கலங்கரை விளக்கம் இந்த நூல். வியர்வையால் உயரும் சபீதா ஜோசப் போன்றவரால் தான் சக இளைஞர்களுக்கு இப்படி ஒரு நூலை வழங்க முடியும். சபீதா ஜோசப் சிகரங்களுக்கு மேலே சிறகடித்து உயர எனது வளர்பிறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
( பழனிபாரதி )
|