கம்பியில் போகிற மின்சாரத்தை காலில் போட்டு மிதிக்கிற வயசுதான் இந்த பதினாறு. இந்த வயதில் எல்லாரையும் அள்ளிக் கொண்டு போகும் காதல் என்னவெல்லாம் செய்யும் என்பதை பத்து விரல்களாலும் தலை கோதி சொல்லியிருக்கிறார் எஸ்.டி.சபா. படம் பார்க்கிற பெருசுகளுக்கும் இளசுகளுக்கும் படக் படக் என்று அடித்துக் கொள்ளும் மனசு!
கல்லு£ரியில் படிக்கிற சக இளைஞன் சிவாவுடன் காதல் வயப்படுகிறார் மது ஷாலினி. அந்தஸ்தை குறுக்கே விட்டு அரைத்த மாவையே அரைக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தால், வாங்க மாப்ளே என்கிறார் வருங்கால அத்தை. அப்படியே காதலர்களிடம் புத்தகம் ஒன்றையும் கொடுத்து அவர் படிக்கச் சொல்ல, பிளாஷ்பேக்காக விரிகிறது மதுஷாலினியின் அப்பாவுடைய காதல். அவரால் காதலிக்கப்பட்ட இளவரசி இப்போ எங்கே என்கிற ஆசை பிறக்கிறது சிவாவுக்கும், படத்தை பார்த்துக் கொண்டிருக்கிற நமக்கும்.
அந்த கடைசி ரீல், தடதடக்கும் இதயத்தோடு நம்மையும் இழுத்துக் கொண்டு ஓடுகிறது. அங்கே இளவரசி என்னவாக இருக்கிறாள் என்பதோடு சுபம்!
சென்னை 28, தமிழ்ப்படம் என்று நாம் பார்த்து பார்த்து வெடிஜோக்கிய அதே சிவாதான். ஆனால் இங்கே அவரை மொக்கையாக்கிவிட்டு முந்திச் செல்கிறது வேறொரு ஜோடியின் காதல். என்றாலும் இவருக்கேயுரிய நக்கல்ஸ் இல்லாமல் இல்லை. மச்சான் மச்சான் என்று அவர் தன் காதலியை கொஞ்சுகிற அழகை கேட்க இன்னும் ரெண்டு காதுகள் எக்ஸ்ராவாக வேண்டும். இவரது காதலி மதுஷாலினியிடம் நடிப்பும் அழகும் நகமும் சதையுமாக பின்னிக் கிடக்கிறது. சிவாவை யாரென்றே தெரியாது என்று மறுத்து, பின்பு அவனோடுதான் என் லைஃப் என்று பொங்கி, கடைசியில் குழம்பி தவிக்கிற காட்சியெல்லாம் தேர்ந்த நடிகைகளுக்கேயுரிய சிறப்பு.
அப்புறம்... அந்த பிளாஷ்பேக் விடலைகள். (புதுமுகங்கள் வினிதா, கிஷோர்) டென்த் படிக்கிற வயசு. மனசு முழுக்க கிளைடாஸ்கோப் கொட்டி ரசிக்கிறார்கள் இருவரும். இளவரசிக்கு ஐ, கோபிக்கு ஜி என்று அடையாளம் கொள்ளும் கோபி, சுவர் முழுக்க 16... 16 என்று எழுதிவைக்க, இந்த 6 என்பது ஆங்கில எழுத்தான ஜி என்பதே அப்புறம்தான் விளங்குகிறது! ஒரு காட்சியில் முறைப் பையனோடு பைக்கில் போகும் வினிதா தென்னை மரங்களில் எழுதப்பட்டிருக்கும் நம்பர்களில் ஒன்றான 16 ஐ பார்த்து பரவசப்படுவது விசிலடித்து ரசிக்க வேண்டிய விஷ§வல்!
கோபத்தில் கடுகடுப்பாகும் வினிதா, தன் குடும்பத்தையே எதிர்த்துக் கொண்டு செய்கிற அட்டகாசங்கள் ஒவ்வொன்றும் பயங்கரம். நேரில் பார்க்கிற ரசிகர்கள் நாலு அறை விட்டால் கூட ஆச்சர்யம் இல்லை. அவன் சம்பாத்தியத்துல ஒரு துணி மணி கூட வாங்கி தர முடியாது என்ற ஒற்றை வார்த்தைக்காக கோவிலுக்குள் புகுந்து கொண்டு எல்லாவற்றையும் அவிழ்த்துப்போடும் அவளது கோபம் இவள் பெண்ணா, பேயா என்றே கலங்க வைக்கிறது.
வினிதாவின் அப்பாவாக நடித்திருக்கிறார் பத்திரிகையாளர் குணா. தமிழ்சினிமாவுக்கு கிடைத்திருக்கும் குணச்சித்திர சொத்து! கை மீறி போன மகளை கட்டுப்படுத்த முடியாமல் கலங்கி தவிக்கும் ஒரு குளோஸ் அப் காட்சி போதும், இனிவரப்போகும் சினிமாக்களிலும் குணாவின் ஆதிக்கத்தை மெய்பிக்க! ஒரு சில சீன்கள் மட்டும் வருகிறார் கஸ்து£ரி. அவர் வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத கேரக்டர் அது.
அச்சு அசலான கிராமம். அங்கு அச்சுவெல்லத்தை விளைய வைத்த மாதிரி வசனங்கள் என்று கவனிக்க வைத்திருக்கிறார் வசனகர்த்தா மகாலிங்கம்!
கிராமம், நகரம் என்று எல்லா திசைகளிலும் நமது கையை பிடித்துக் கொண்டு நடக்கிறது யுவன் சங்கர்ராஜாவின் பின்னணி இசை. பாடல்களும் இனிமை. அருள்தாசின் ஒளிப்பதிவில் கிராமம் குளுமை.
நல்ல குடும்பத்தில் பிறந்தவள். ஏன் இப்படி அடங்காமல் ஆட்டம் போடுகிறாள் என்று தொக்கி நிற்கிற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் டைரக்டர் விடை சொல்லியிருந்தால், 16 ன் ஆயுள் தலைகீழாகியிருக்கும்.
-ஆர்.எஸ்.அந்தணன் |