மட்ட மத்தியானத்துல து£ங்கியவன் மண்டையில, கெட்ட சொப்பனம் ஏறுன மாதிரி ஒரு படம்! தலைப்பின் பாதி கட்டவிழ்த்து வந்து நம்மையே துரத்துகிற மாதிரி ஒரு ஃபீலிங்.
எடுக்கப்பட்ட விதமோ, சொல்லப்பட்ட ஸ்டைலோ, கிரேட்! ஆனால் எடுத்துக் கொண்ட கதைதான் 'அடப்பாவிகளா' என்று அதிர வைக்கிறது. எட்டு வயது மகனை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிறான் ஒரு அப்பன். 'நான் இப்படி ஆனதுக்கு காரணமே எங்கப்பன்தான்' என்று வாய் திறக்கிறான் அவனது மகனான சைக்கோ இளைஞன். போலீஸ் பிடியில் அவன் சொல்லும் பிளாஷ்பேக்தான் குடும்பத்தின் உன்னத உறவுகளை குத்தி கூறு போடுகிறது. அதன் உன்னதத்தை உறிஞ்சி, கெட்ட ஏப்பம் விடுகிறது.
கொடுமைக்கார அப்பா இறந்தபின் அநாதையாக விடப்படும் எட்டு வயது சிறுவனை எடுத்து வளர்க்கிறாள் மீனாட்சி. வார்த்தைக்கு வார்த்தை மீனாட்சியம்மா... மீனாட்சியம்மா... என்கிறான் அவன். ஆனால் அவனே வளர்ந்து வாலிபன் ஆனதும் அதே அம்மாவை கெட்ட சிந்தனையோடு அணுகுகிறான். முதலில் மறுக்கும் அவள், அப்புறம் சம்மதிப்பதாக போகிறது கதை. (மூலக்கதை எந்த சரோஜாதேவியில் இருந்து உருவப்பட்டதோ?)
அடுத்தடுத்த காட்சிகளில் அந்த மீனாட்சி ஒரு திருமணமும் செய்து கொள்கிறாள். முதலிரவிலேயே கத்தியை இறக்கி புது மாப்பிள்ளையை காலிசெய்யும் மகன்(?) 'எனக்கு நீ வேணும்' என்கிறான் வெறியோடு. அதை தொடர்ந்து நடக்கும் சம்பவத்தில் அவள் மேனியெல்லாம் தீயில் கருகி, முடியெல்லாம் பொசுங்கி, அவனால் தேவதையாக பார்க்கப்பட்டவள் பிசாசு போலாகிறாள். இறந்தவளை இருப்பதாகவே நினைத்துக் கொண்டு வெற்று சுவரை பார்த்து பேசிக் கொண்டிருக்கும் அவன், செய்யும் கொலைகளும், குரூரங்களும்தான் மிச்ச சொச்சம்.
கவுதமின் உதவி இயக்குனரான வீரா என்பவரே இந்த சைக்கோ பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு அட்சரம் பிசகாமல் பொருந்தியிருக்கிறது இந்த கேரக்டர். வீரா என்ற நார்மல் மனிதனையும் சமர் என்ற சைக்கோவையும் தனக்குள் அடக்கிக் கொண்டு அவர் தடுமாறுவதும் சவால் விடக் கூடிய நடிப்புதான். மூன்று போலீஸ் அதிகாரிகளை போட்டுத் தள்ளிவிட்டு அவ்வளவு எளிதாக தன் பங்களாவுக்குள் அவர் சென்றுவிடுகிற காட்சியெல்லாம் பெரிய பூச்சுற்றல்.
உடம்பெல்லாம் தீயால் வெந்து குரூரமாக நடமாடும் அந்த பெண்ணும் அபார நடிப்பால் மிரட்டுகிறார்.
வீராவிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் அபலை பெண்ணாக சமீரா ரெட்டி. நெஞ்சுக்குள் பெய்ந்த மா மழையா அது? ஐயோ பாவம். கடைசியில் அவர் தப்பிக்கும் போதுதான் நமக்கும் மூச்சு வருகிறது.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, யதார்த்தத்தை அப்படியே வெளிப்படுத்துகிறது. பின்னணி இசையில்லை. பாடல்கள் இல்லை. ஆனால் அவை இல்லாத குறையை போக்கிவிடுகிறது ஸ்பெஷல் சவுண்ட்ஸ்.
மாடு பிடிக்க போன பாகவதரிடம், ஏன் இந்த வேலை? என்போமில்லையா? அப்படிதான் கேட்க தோன்றுகிறது கவுதம் மேனனிடமும்.
நடுநிசி நாய்கள்- குண்டூசி நிமிடங்கள்!
-ஆர்.எஸ்.அந்தணன்
|