ஒன்பது சண்டை, அஞ்சு பாட்டு இவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் போக மீதி நேரத்தை நிரப்ப அருமையான அக்கா-தம்பி சென்ட்டிமென்ட்! போதாதா? இந்த முறையும் தன் கொடியை பழனியூர் கோட்டையில் படபடவென பறக்கவிட்டிருக்கிறார் பேரரசு.
பரத்தின் அறிமுகக்காட்சியே, கார மிளகாயை கடித்த மாதிரி இருக்கிறது. பிஞ்சை பூவாக்கி, பூவை விதையாக்கி என்று இவர்கள் பேசுகிற டயலாக்கிற்கு முன்வரிசை வாலிபர்கள் விசிலடிக்காமல் இருந்தால் ஆச்சர்யம். பத்து வயதிலேயே கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகும் பரத், விடுதலையாகி வந்தபின் அக்காவிடமே கார் டிரைவராக வேலைக்கு சேர்கிறார். ஆனால் அக்காவுக்கு தெரியாது இவர்தான் தன் தம்பி என்று. இந்த பாச மலர் எபிசோட் ஒருகட்டத்தில் முடிவுக்கு வருகிறது. தன்னிடம் இருக்கிற கார் டிரைவர் தன் தம்பிதான் என்று தெரிந்து கொள்ளும் அக்கா குஷ்பு, அவரால் தன் கணவருக்கு ஆபத்து என்று தப்புக்கணக்கு போட்டு வெளியே அனுப்புகிறார்.
அக்கா கணவரின் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் பரத், அக்கா வாழ்வதற்காக மறுபடியும் சில பல கொலைகளை செய்துவிட்டு மீண்டும் ஜெயிலுக்கு போவதுதான் முடிவு. இடையில் காஜல் அகர்வாலிடம் காதல் கொள்வது சில டூயட்டுகளுக்கு உதவியிருந்தாலும், அகர்வாலின் வரவு கோலிவுட்டில் திறக்கப்பட்டுள்ள மற்றொரு ஸ்வீட் ஸ்டால்.
பரத்திற்கு பச்சக் என்று பொருந்தியிருக்கிறது இந்த ஆக்ஷன் சட்டை! பிஜுமேனனை மாட்டிவிடும் நோக்கத்தில் போலீஸ் அதிகாரியையும், இவரையும் தொலைபேசியில் கோர்த்துவிடும் காட்சிகள் தியேட்டரையே கிடுகிடுக்க வைக்கிறது. ஒரு டைனோசர் போல பரத் காட்டியிருக்கும் வேகம் பிரமிப்புதான்.
யாரோ கோவிலில் பிச்சை எடுக்கிறவள் கொடுக்கிற அட்ரஸ் காஜலின் கல்யாணத்தையே நிறுத்துகிற அளவுக்கு போவதெல்லாம் கொஞ்சம் ஓவர் சாமி. ஆனாலும், அதுவே பரத்-காஜல் ஒட்டலுக்கு பெவிக்கால் ஆகியிருப்பது சுவாரஸ்யம்தான். அவருக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் பேர்வழி என்று பரத், சொத்தை ஆட்களையெல்லாம் கூட்டி வருவது பகீர் சிரிப்பு.
வில்லியாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா. வீட்டை நான் வச்சுக்கிறேன். என்னை நீ வச்சுக்கோ என்ற இவரின் லாஜிக், ரொம்ம்ம்ப பயங்கரம்ப்பா!
“பொம்பளை சமையறதும், ஆம்பிளைக்கு அமையறதும் எப்போ நடக்கும்ணே தெரியாது” -இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க டயலாக்குகளை எழுத பேரரசுவின் பேனாவால் மட்டுமே முடியும். ஒருகாட்சியில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். நல்லவேளை, தனக்காக ஒரு பைட் வைத்துக் கொள்ளாதது ஆறுதல்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் எல்லா பாடல்களும் ஜோர்.
காரம் போட்ட கமர்ஷியல் பஞ்சாமிர்தம்!
-ஆர்.எஸ்.அந்தணன்
|