'மறுபடியும் ஒரு காதல் கோட்டை' என்றே தலைப்பு வைத்திருக்கலாம். 'ஈயடிச்சான்...' விஷயத்தில்தான் அப்படியொரு ஒற்றுமை. பார்க்காத காதலால் பரவசப்படும் ஒரு ஜோடி, சந்தர்ப்பவசத்தால் கல்யாணம் பண்ணிக் கொள்கிறது. தான் காதலித்த அதே இதயத்தோடுதான் இணைந்திருக்கிறோம் என்பதே புரியாமல் எண்ணையும் தண்ணீருமாக திரியும் இருவரும் உண்மை தெரியவரும்போதாவது ஒன்று சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.
லண்டனில் படிக்கும் பணக்கார பெண் ஜோஷ்னா, இந்தியாவிலிருக்கும் அனிருத்தை காதலிக்கிறார். ஒரு வானொலி நிகழ்ச்சிக்காக இருவரும் கவிதை எழுதி அனுப்ப, இரு கவிதைகளின் சாயலும் ஒரே மாதிரியாக அமைகிறது. பய புள்ளைங்க லவ்வுக்கு இந்த ஒரு காரணம் போதாதா? மெயிலேயே காதல் ரயில் விட்டுக் கொள்கிறார்கள் இருவரும்.
மருத்துவரான அனிருத் நாட்டின் ஜனாதிபதிக்கே வைத்தியம் பார்க்கிற அளவுக்கு உயர்கிறார். லண்டனிலிருந்து இந்தியாவுக்கு படிக்க வரும் ஜோஷ்னா, அனிருத்தின் மெயில் அட்ரஸ் மற்றும் இன்னபிற ஆவணங்களை லண்டனிலேயே தவறவிட்டு விடுவதால், இங்கு வந்து தவியாய் தவிக்கிறார். இந்த நிலையில் அனிருத்துக்கும் ஜோஷ்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது. பெயரளவில்தான் புருஷன் பெண்டாட்டி. மற்றபடி காதல் தோல்வியால் சரக்கடிக்க துவங்கிவிடும் அனிருத், வாந்தியும் பிராந்தியுமாக வாழ ஆரம்பித்துவிடுகிறார்.
க்ளைமாக்ஸ் நடைபெறும் இடம் மருத்துவமனை. புரிந்திருக்குமே?
அனிருத்துக்கு இது முதல் படம் என்றால் நம்பவே முடியாது. நடிப்பை பொறுத்தவரை து£க்கல், ஆள் வில்லனுக்குரிய விசேஷ தகுதிகளுடன் இருப்பதால் இவரது லவ்வில் ஒரு லைவ்வே இல்லை.
முதல் படம், கதையை பற்றி கவலைப்பட முடியாது. அட்லீஸ்ட் சதையை பற்றியாவது கவலைப்பட்டிருக்கலாம் புதுமுகம் ஜோஷ்னா. கிள்ளியெடுக்க முடியாத ஒல்லி. நல்லவேளை, நடிப்பில் மட்டும் கில்லி!
தாரை, தப்பட்டை, பேண்டு, வாண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட வேண்டிய வடிவேலு, இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி. எப்பவோ துவங்கிய படம் என்றாலும் வடிவேலு தரிசனம் அமையத் தந்த ஒரே காணத்திற்காகவே டைரக்டர் வாசு.பாஸ்கருக்கு நன்றி. போலி டாக்டராக வரும் வடிவேலு ஒரு நோயாளி வயிற்றுக்குள் ஹெல்மெட்டை வைத்து தைத்துவிடுகிறார். இன்னொரு நோயாளியிடம் தருவதற்கு மீதி சில்லரை இல்லை என்பதற்காகவே நன்றாக இருக்கும் வேறொரு பல்லை பிடுங்கிவிட்டு 'சில்லரை சரியாப் போச்சு' என்கிறார். குதிரை இளைத்தாலும் ஓட்டத்துக்கு குறையேது?
மிக சோகமான காட்சிகளில் ஒய்.ஜி.மகேந்திரனின் பர்பாமென்ஸ் வொய் ஜி வொய்? என்று நம்மை கதற வைக்கிறது. முடியல பாஸ், சினிமாவையே விட்ருங்க. பொழச்சி போகட்டும்...
ஒரு குத்தாட்டம் இருக்கிறது. தாடி தேவராஜும் லேடி சஞ்சனாவும் ஆடுகிறார்கள். செம என்ஜாய்மென்ட். பாடல்களில் தனி கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. ர.கண்ணனின் ஒளிப்பதிவில் லண்டன் அழகோ அழகு. நேரில் பார்த்த மாதிரி சந்தோஷம்.
மெயிலில் முதல் எழுத்தை டைப் செய்தாலே நமக்கு பழக்கமான மெயில்கள் வரிசை கட்டி நிற்குமே, ஜோஷ்னா குழம்புவது ஏன்? குறிப்பிட்ட லண்டன் வானொலியின் போன் நம்பரை நெட்டில் தேடினால் சட்டென்று கிடைக்குமே, பிறகென்ன சிக்கல்?
இப்படி நொண்டியடிக்கிற கேள்விகள் நமக்குள்ளிருந்து முண்டியடித்துக் கொண்டு வருவதால், இந்த அமர லவ்வு ஒரே ஜவ்வு...
-ஆர்.எஸ்.அந்தணன் |