'இந்த படத்தில் கதையென்று ஏதேனும் தென்பட்டால் அது உங்கள் கற்பனையே!' படத்தின் டைட்டிலிலேயே இப்படி சொல்கிற துணிச்சல் ஒரு டைரக்டருக்கு இருக்கிறதென்றால்...? ஆர்வம் உந்தித் தள்ள குவார்ட்டர் நிரம்பிய கிளாசில் குளிர குளிர ஐஸ்கட்டியை போட்ட மாதிரி ஜில்லென்று நிமிர்ந்து உட்காருகிறோம். காட்சிகள் நகர நகர இது வழக்கமான தமிழ்சினிமா அல்ல, மாற்று சினிமா விரும்பிகளை கூட 'மப்பேற்றுகிற' சினிமா என்பது புரிந்து போகிறது.
குடிமகன்கள் கொண்டாடுகிறார்களோ இல்லையோ? கொஞ்சக்குடி போதைக்காரர்களுக்கு இதுதான் போதி மரம். இத்தனைக்கும் 'குடி' என்றோ, 'குடிக்காதே' என்றோ ஒரு காட்சியிலும் போதனை செய்யவில்லை இந்த புதுமுக இயக்குனர் கமல கண்ணன்.
தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகிப் போன டாஸ்மாக்கும், அதையொட்டிய குடிமடங்களும் எந்த லட்சணத்தில் இருக்கின்றன என்பதை கூர்மையாக சொல்லியிருப்பது இப்படத்தின் கவன ஈர்ப்பு சமாச்சாரங்களில் ஒன்று. கடையை திறப்பதற்கு முன்பே காத்திருக்கும் குடிகாரர்களில் ஆரம்பித்து, கடை நேரம் முடிந்த பின்னாலும் வீட்டுக்கு போகாமல் ரூல்ஸ் பேசும் வாடிக்கையாளர்களை பற்றியும் அளக்கிறது படம்.
ஒரு ஆலமரத்தில் விதவிதமான பறவைகள் வந்தமர்வது போல, இந்த குடிமடத்திற்கு வந்து போகிறார்கள் குடிகாரர்கள். அவர்களின் சம்பாஷணைகளும், ரகளைகளும்தான் படம். அதை 'பார்'அடிக்காமல் ஸாரி... போர் அடிக்காமல் சொல்வதுதான் இந்த படக்குழுவினரின் ஆகப்பெரிய முயற்சி. 'நைன்ட்டி' பர்சென்ட் அதை செவ்வனே செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதிலும் பெட்டிசன் மணி கேரக்டரில் நடித்திருக்கும் அந்த தோழர் என்.டி.ராஜ்குமாரின் ஒவ்வொரு அசைவிலும் அப்படியொரு குடிகார எபெக்ட். இவர் வந்தாலே தெறித்து ஓடுகிறார்கள் கடை பையன்கள். அவ்வளவு போதையிலும் 'நீ குழந்தை தொழிலாளி. வேண்டாம்...' என்று இவர் கட்டுப்படுகிற கம்யூனிசத்தாலும் நம்மை கவர்ந்து விடுகிறார் தோழர். என் அப்பன்டா நீ... என்று இவர் அன்பு செலுத்துவதை அநேகமாக எல்லா பார்களும் பார்த்து சலித்திருக்கும். ஆனாலும் அவ்வளவு சுவாரஸ்யம் அதில். எல்லா பாடல்களையும் இவரே எழுதியிருக்கிறார். வார்த்தைகளில் அப்படியொரு புதுமை வழிந்தோடுகிறது. (நீங்கள்ளாம் ரெகுலர் சினிமாவுக்கு வரணும்ணே...)
இவரைப்போலவே கடையை நிறைக்கும் இன்னொரு 'குடிமகன்' ராமு. பூ படத்தில் பார்த்தது. அதற்கப்புறம் சொல்லும்படியாக எதிலும் நடிக்காவிட்டாலும், வட்டியும் முதலுமாக இதில் கொடுக்கிறார் ராமு.
போதைக்கு ஊறுகாய் போல கொஞ்சூண்டு காதலும் இருக்கிறது படத்தில். கடை ஓனர் மகளுக்கும், கடை சப்ளையர் ரபீக்குக்கும் காதல். எந்த நேரத்தில் ஓனர் பார்ப்பாரோ, ரெண்டு கொலை விழுமோ என்று பதற வைக்கிறார்கள்.
கோகி... கோக்கி... என்று நெஞ்சில் குத்திக் கொண்டு காதல் சோக ராகம் பாடும் அந்த இளைஞர் அதிர வைக்கிறார் தியேட்டரை.
குடிகாரன் உண்மையைதான் உளறுவான் என்கிற சிந்தாந்தப்படி பார்த்தாலும், இப்படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் ஊசிமுனை! 'நம்ம தள்ளாடுற வரைக்கும்தான் கவர்மென்ட்டு ஸ்டடியா இருக்கும். நம்ம ஸ்டடியாயிட்டம்னா கவர்மென்ட்டு தள்ளாட வேண்டியதுதான்!' என்கிற வசனத்திற்கு கைதட்டாத விரல்கள் ஏது?
அழுகிப்போன காய்கறிக்காக கவலைப்படும் பார் ஊழியனிடம், 'குடிகார பயலுகளுக்கு ஆக்கி போடுறதுதானே, இது போதும்' என்கிற வசனம் எத்தனை குடிகாரர்களை திருத்த உதவுமோ? அப்படி திருந்தினால் வசனம் எழுதிய விரல்களுக்கு போகட்டும் அப்புண்ணியம்.
பெரும்பாலும் கடை களைகட்டுவது மாலைப் பொழுதுகளில்தான். படத்தின் அதிக நேரத்தையும் அதுவே எடுத்துக் கொள்வதால், ஒளிப்பதிவாளர் சமீ.பாஸ்கரன் திறமை பளிச்சிடவும் அதுவே காரணமாகிறது. குடிகாரன் பேச்சு வளவளதானே? அதை நறுக்கென்று வெட்டுகிற இடத்தில் வெட்டுகிற துணிச்சல் மென்டோஸ் அந்தோணியின் கைகளுக்கு. கச்சிதம்.
பின்னணி இசையில் குடமுருட்டினாலும், பாடல்களில் மனம் கவர்கிறார் வேத்சங்கர் சுகவனம். அதிலும் மஞ்ச திரவத்துல... பாடல் செவிக்கினிய ட்யூன்.
படத்தில் நடித்திருக்கும் அத்தனை கேரக்டர்களும் உணர்ந்து நடித்திருக்கிறார்களோ, அல்லது டைரக்டர் வேலை வாங்கியிருக்கிறாரோ, இந்த வரலாற்று சிறப்புமிக்க படத்தில் தலைகாட்டியதே தனிப்பெருமை!
எவ்வளவு நசுக்கினாலும் உடையாத 'டிஸ்போசபிள் கிளாஸ்' மாதிரி, யார் புறக்கணித்தாலும் இந்த படம் ஓடும். இந்த நல்ல காரியத்தை டாஸ்மாக் சந்தாதாரர்களே செய்து முடிப்பார்கள். ஏனென்றால் கண்ணாடியில் முகம் பார்க்கவும் பிடிக்கும் குடிகாரர்களுக்கு!
-ஆர்.எஸ்.அந்தணன் |