தெப்பக்குளத்துல திமிங்கலத்தை இறக்கிவிட்ட மாதிரி படம் முழுக்க குலுங்கி¢க் கொண்டேயிருக்கிறது தியேட்டர். பேரரசு கதைக்கு பாக்யராஜ் வசனம் எழுதினால் எப்படியிருக்குமோ, அப்படி நகைச்சுவை நகாசு வேலைகளிலேயே நம்மை வசீகரித்து விடுகிறார் அறிமுக இயக்குனர் தமிழ்ச்செல்வன். ஆனாலும் சுவர் பழசென்பதால் சித்திரத்திலும் கொஞ்சம் சிக்கல் வாத்யாரே!
ஆடு, தோடு என்று கிடைத்ததையெல்லாம் திருடும் கொள்ளைக்காரன்தான் விதார்த். (தம்மாத்துண்டு திருடனுக்கு கொள்ளைக்காரன்னு பெயர் வைக்கறதெல்லாம் சரிங்களா தமிழ்?) பொறுப்பில்லாமல் திரியும் இவரையும் காதலிக்கிறார் சஞ்சிதா. யாருக்கும் அடங்காமல் திரியும் விதார்த், அந்த ஊர் தர்மகர்த்தாவுக்கும் அதே முகத்தை காட்ட, நேரம் பார்த்து கழுத்தறுக்கிறார் வில்லன். திருட்டு தொழிலுக்கு 'பூட்டு' போட்ட பின்பு சோதனை வருகிறது விதார்த்துக்கு. கோவில் நகையை தானே திருடிவிட்டு பழியை இவர் மீது போடுகிறார் வில்லன். அதில் நடக்கும் சண்டையில் மனவளர்ச்சி குன்றிய தங்கையை பறி கொடுக்கிறார் விதார்த். அப்புறமென்ன? ரத்தகளறியாகிறது ஏரியா. வில்லனை கொன்றுவிட்டு சிறைக்கு போகும் விதார்த், அப்புறம் வந்து காதலியை கரம் பிடிப்பதே முடிவு.
'மைனா' ஹிட் என்பதாலேயே விதார்த்துக்கு குருவி என்று பெயர் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. திருட்டு ஆட்டை விற்ற பணத்தில் கூலிங்கிளாஸ், குளுகுளு சட்டை சகிதம் வரும் விதார்த், தனது அழகை வர்ணிக்க ஆள் பிடிப்பதே செம காமெடி. ஜியாமென்ட்ரி பாக்சில் பணம் இருப்பது தெரியாமல் சஞ்சிதாவிடம் அதை நேர்மையாக திருப்பிக் கொடுப்பதும், அவருக்காகவே டுட்டோரியல் காலேஜில் சேர்ந்து படிக்க முனைவதுமாக ரகளையடிக்கிறார். சஞ்சிதாவை அடிக்கும் வாத்தியாருக்கு, அடுத்த கணமே விழுகிற பிரம்படிக்கு தியேட்டரே 'கொல்'லென்கிறது. இமேஜ் பார்க்காமல் அக்காவிடம் விளக்குமாறு அடி வாங்குகிற காட்சி ஒன்றுக்காகவே ஸ்பெஷலாக பாராட்டலாம் விதார்த்தை.
தெருமுனையில்... பஸ் ஸ்டாண்டில்... இப்படி எங்கு பார்த்தாலும் தென்படுகிற முகம்தான் சஞ்சிதாவுக்கு. அதுவே அவர் மீது தனி அட்டென்ஷனை ஏற்படுத்துகிறது. இதே அடக்க ஒடுக்கத்தை பின்பற்றினால் இன்னொரு தேவயானியாகலாம். யோசிங்க தங்கச்சி.
ஆட்டை திருட்டுக் கொடுக்கிற ஆயா முதல், அநியாயமாக செத்துப் போகிற சிறுமி வரைக்கும் ஃபுல் மார்க் கொடுக்கலாம் எல்லா கேரக்டர்களுக்கும். அந்த மாமிதான் பாவம். இவரது எந்த அங்குலத்தில் சறுக்கி விழுந்தாரோ அந்த வில்லன் பாவி!
ஜோகன் இசையமைத்திருக்கிறார். நடன அமைப்பில் துவங்கி ராகம் வரைக்கும் எல்லாமே அரைத்த மாவு!
டைரக்டர் தமிழ்ச்செல்வனின் பேனாவில் துள்ளிவிளையாடும் நகைச்சுவை, மனசை கொள்ளையடிக்கிறது. ஆனால் கொள்ளைக்காரனை வளைத்துப் பிடிக்க அது மட்டும் போதுமா என்பதுதான் ஒரே கேள்வி!
-ஆர்.எஸ்.அந்தணன்
|