படபடவென்று திரிவாள் பெண். பார்வை கிடைக்குமா என்று அலைவான் ஆண். யாதுமாகியில் கொஞ்சம் தலைகீழ். மேல் வீட்டில் குடியிருக்கும் சச்சின் மீது சுனைனாவுக்கு லவ்வோ லவ். அவரை கண்களில் விழுங்கி, கவிதையாக ஜீரணிக்கிறார். ஆனால் இந்த காதலை புரிந்து கொள்ள வேண்டிய சச்சினோ பெயருக்கேற்றார் போல விளையாட்டு பிள்ளை. அதுவும் எந்தளவுக்கு?
அரண்மனை போன்ற வீட்டையும், அரசன் போன்ற வாழ்க்கையையும் உதறி தள்ளிவிட்டு ஆஃப்ட்ரால் சச்சினாக வாழ்கிற அளவுக்கு. ஹாபியும் தொழிலும் போட்டோகிராபி. போஸ் தருகிற மாடல்கள் எல்லாம் இவருக்காக வழிய, இவரோ "போங்கடி.... அதெல்லாம் எனக்கெதுக்கு?" என்ற அலட்சியத்தோடு நடமாடுகிற ஆறடி அழகன். அப்படிப்பட்டவன் எப்படி சுனைனாவிடம் விழுந்தான் என்பதுதான் யாதுமாகி.
கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு வந்து, "இன்னைக்கு வெள்ளிக்கிழமை" என்று சொன்னால் கூட ஆச்சர்யமாக பார்க்கும் அப்பாவி பெண்ணாக சுனைனா. என்னவோ தெரியவில்லை. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் யாதுமாகி நிற்கிறார் மனசு முழுக்க. அந்த பாவாடை தாவணி அழகும், என்னதான் அலட்சியப்படுத்தினாலும் காதலன் மேல் பித்தாகி திரிகிற லவ்வும் சுனைனா ரசிகர் மன்றத்தில் போஸ்டர் ஒட்டுகிற வேலை கிடைத்தாலும் போய்விடலாம் என்கிற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார். (இப்படியே நாலு படம் நடிச்சா மதுரை பக்கத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் தெனாவட்டாக சீட்டே கேட்கலாம் தாயி....)
புதுமுகம் சச்சினுக்கு முதல் படம் என்று சொல்ல முடியாதளவுக்கு நடிப்பில் தேர்ச்சி இருக்கிறது. ஆனால் ஆமை வேக திரைக்கதையை வைத்துக் கொண்டு அவரும் என்னதான் செய்வார் பாவம்? நண்பனுக்கு ஜுரம் என்றால் சுனைனா என்ன செய்வார்? பொசுக்கென்று அவரது கையை பிடித்து பரபரவென்று இழுத்து சென்று கஞ்சி வைத்துக் கொடுக்க சொல்வதும், அதை சுனைனாவின் அப்பாவே கவலையோடு கவனிப்பதும் வேடிக்கை. அதே அவசரம் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்கிற விஷயத்திலும். தனக்கு பழக்கமான பெண்ணை எத்தனையோ கி.மீ தாண்டி சந்திக்கிறோம் என்ற ஆர்வமே இல்லாமல், கண்டக்டருக்கும் பயணிக்கும் உள்ள உறவை போல நடந்து கொள்கிறார். கொஞ்சம் பேத்தலாக இருந்தாலும் இப்படியும் கூட இளைஞர்கள் இருக்கதானே செய்கிறார்கள்?
மாடலிங் தொழில் மேல் ஒரு பயமே வருகிற அளவுக்கு சில காட்சிகளை கோர்த்திருக்கிறார் இயக்குனர் பாலகுமார். அப்பாவி சுனைனா நீச்சல் உடையுடன் வினைல் போர்டில் உலவுவது பார்க்க பார்க்க வேதனையாக இருக்கிறது. அதை எந்த நேரம் அவரது அப்பா பார்த்து தொலைப்பாரோ என்ற பதற்றமும் வருகிறது. நல்லவேளை... கதாசிரியருக்கு நன்றி. அப்பாவாக நடித்திருக்கும் அழகன் தமிழ்மணியிடம் பெண்ணை கரை சேர்க்க வேண்டுமே என்ற கவலை நிரந்தரமாகவே குடி கொண்டிருக்கிறது.
கோயில் நகரமான கும்பகோணத்தை 'குட்டிகள்' நகரமாக்கிவிட்டார் இயக்குனர். அதுவும் தொப்புளுக்கு வர்ணமடித்துக் கொண்டு வருகிற அந்த குட்டி(?) உவ்வே.... அதே மாதிரி வலிய திணிக்கப்பட்ட அந்த சண்டைக்காட்சியும்.
சுனைனாவின் தோழி, ரியாஸ்கான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என்று நடிகர்கள் தேர்வில் பெருத்த ஏமாற்றமும் எரிச்சலும்.
ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசை தூர்தர்ஷன் சீரியல் எபெக்ட் கொடுத்திருந்தாலும், பாடல்களில் கலக்கியிருக்கிறார் மனுஷன். அதுவும் 'யாரோ யாரோ' இந்த வருஷத்தின் அற்புதமான மெலடி! ஒளிப்பதிவாளர் முகமது நசீரும் பாராட்டுக்குரியவரே
சமீபத்தில் வந்த கமர்ஷியல் கலவரங்களுக்கு நடுவில், கலங்கரை விளக்காக பளிச்சிடுகிறது யாதுமாகி...
-ஆர்.எஸ்.அந்தணன்
|