|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
விமர்சனம்

திட்டக்குடி
Thittakudi - Movie

இஷ்டப்படி வாழுற 'சினிமா திட்டக்குடி' இது. நிஜ திட்டக்குடிக் காரர்கள் நல்லவர்களாக இருக்கவும், இந்த படத்தை பார்த்து விட்டு 'நம்ம ஊரு பேருக்கு கொள்ளி வச்சுட்டாங்களே' என்று ஆத்திரப்படாமலிருக்கவும் முப்பத்து முக்கோடி தேவர்களை பிரார்த்திப்போமாக!

ஸ்கூலுக்கு போகிற வயசில் தியேட்டரில் ரஜினி படம் பார்த்து விட்டு ரவுசு பண்ணுகிற சிறுவன், வளர்ந்த பிறகு யார் யாருடைய குடியையெல்லாம் கெடுக்கிறான் என்பதே கதை. இடையிடையே அவனே குடிக்கிற 'செல்ஃப் குடி' தனி! ஜென்ம எதிரி என்று அப்பா கருதுகிற மேஸ்திரியிடமே வேலைக்கு சேர்ந்து கொத்தனாராகிறான். இந்த பிரமோஷனுக்கு பின் ஒரு சித்தாளை கூட விடுவதில்லை. செக்ஸ் டார்ச்சர்தான். தொழில் கற்றுக் கொடுத்த மேஸ்திரியின் மகளுக்கே கணக்கு போட்டு காய் நகர்த்த, அவளோ காதல் என்று கருதுகிறாள் அதை! விரட்டி விரட்டி காதலிக்கிறவன் கடைசியில் மேய்ந்து விட்டு கழன்று கொள்ள, அதிர்ந்து போகிறாள் அவள். குடும்ப மானத்தை கப்பலேற்றிவிட்டாளே என்று அப்பாவும், ஊர் பெரிய மனுஷன்களும் அவளை கொல்ல முயல்கிறார்கள். தப்பிக்கிற அவளும், மனம் மாறிய அவனும் ஒன்று சேர்ந்தார்களா என்பது மீதி.

புதுமுகம் ரவி இது முதல் படம் என்று சொல்ல முடியாதளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார். கமல் ரசிகர்களோடு மல்லுக்கட்டுகிற காட்சி தொடங்கி, இறுதி காட்சிவரைக்கும் 'உயிரை கொடுத்து' நடித்திருக்கிறார். ஃபுல் மப்பில் மட்டையாகிற தோழனை வீட்டில் படுக்க வைக்கிறேன் என்று து£க்கி செல்கிற ரவி, அடுத்தவன் மனைவி பக்கத்தில் படுக்க வைத்து அந்த குடும்பத்தையே கிடுகிடுக்க வைப்பது வில்லேஜ் வில்லங்கம். பஞ்சாயத்தில் அந்த பெண் விளக்குமாற்றை எடுத்து வெளுத்து வாங்குவதெல்லாம் லைவ்வான கிராமத்து காமெடி. தம்பி மனைவியின் துரோகத்தை ஊருக்கும் சொல்ல முடியாமல், உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்குவதும் அற்புதம். ஆனால் எல்லாமே கள்ளில் கலந்த ஊமத்தங்காயாக போனதுதான் பரிதாபம்.

அஸ்வதாவுக்கு ஸ்கர்ட்டை மாட்டியிருந்தால் ஆறாங்கிளாஸ் படிக்கிற பெண்ணாகவே கூட காட்டியிருக்கலாம். அப்படியரு குழந்தை முகம். அதில் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களை கூட அநாயசமாக வெளிப்படுத்துகிறது குழந்தை(?). படிக்காத கிராமத்து பெண்கள், அதுவும் இவரை போன்ற ஏழைகளின் காதலுக்கு என்ன மரியாதை என்பதை ஆணியடித்ததை போல சொல்லியிருக்கிறார் டைரக்டர் சுந்தரன்.

இவரது நண்பராக வரும் அந்த குடிகார நண்பனும் பிய்த்து உதறியிருக்கிறார். நண்பனின் துரோகத்தை காண சகிக்காமல் அஸ்வதாவை திருப்பூருக்கு அனுப்பி வைக்கிற போது நமக்கும் ஒரு சின்ன நிம்மதி.

ஒரு டைப்பான மேனரிசத்தோடு வருகிற அந்த 'கட்டிங்' ஆசாமி ஒட்டுமொத்த தியேட்டரின் எரிச்சலையும் வாங்கிக் கட்டிக் கொண்டாலும், நடிப்பில் 'ஃபுல்' ஆகியிருக்கிறார். ஒரு சந்தர்பத்தில் அஸ்வதாவையே தட்டிக்கொண்டு போகிற அளவுக்கு அதிர்ஷ்டசாலி. ஆனால் கட்டிங்குக்காக அவளையே கூ.கொடுக்க துணிகிற அந்த கணத்தில் ரசிகனின் மனசில் பேரிடி விழ வைக்கிறார்.

அட... என்று ஆச்சர்யப்பட வைக்கிற இன்னொருவர், மேஸ்திரியின் கருத்த செட்டப் பெண்மணி. மடியிலிருக்கிற காசையெல்லாம் அவிழ்த்துக் கொடுத்து அவசரம் அவசரமாக அஸ்தாவை பஸ் ஏற்றிவிடுகிற காட்சிகள் அழவைக்கிற சென்ட்டிமென்ட். 'அவளை எங்கிட்ட விட்ரு. நாள் கரையேத்துறேன்' என்பதும் அதே ரகம்தான்.

படம் முழுக்க கள்ளு கடையும், சாராய கடையுமாக பரவி ஓடுகிறது தண்ணீர். குடிப்பது அல்லது சல்லாபிப்பது என்று இரண்டையும் தவிர வேறொன்றையும் செய்யாத ஒருத்தனின் சாவுக்கு எப்படியய்யா அழுவான் ரசிகன்? அடிதட்டு மக்களின் துணிச்சலான சவாலான வாழ்வை சொல்ல தவறி, அவர்களை கூலிக்கு 'மார்' கொடுப்பவர்களாக சித்தரித்திருக்கும் இயக்குனருக்கு நமது கடுமையான கண்டனமும் கூட.

நமது கையை பிடித்துக் கொண்டு கிராமத்திற்கே அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் கருப்பையா. பின்னணி இசையில் தவறினாலும், 'ஒத்த உசிருக்குள்ள' என்ற பாடல் மூலம் பதிந்துவிடுகிறார் இசையமைப்பாளர் செல்வ நம்பி.

திகட்ட திகட்ட குடி என்பதைதான் திட்டக்குடி என்று சுருக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஹ¨ம்...

-ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter