குழந்தை வளர்ப்பு பற்றிய கோனார் திரை உரைதான் வண்ணத்துப்பூச்சி! நகர நெரிசல்களில் சிக்கி குடும்ப உறவுகளையும் இயந்திரமாக்கிக் கொள்ளும் மனிதர்களை நோக்கி அழகப்பன்சி விளாசியிருக்கும் இந்த சாட்டை, அழுத்தமான தடயமாக பதிவதற்குள் விழித்துக் கொண்டால் நல்லது.
குழந்தை ஸ்ரீலட்சுமியை கவனிக்க கூட நேரமில்லாமல் அலுவலக வேலைகளில் மூழ்கிவிடும் தம்பதியினர், விடுமுறையில் தாத்தா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள் அவளை. அங்கே அவளுக்கு வேறொரு உலகம் இருப்பதை காட்டுகிறது வெள்ளந்தி கிராமம். மீண்டும் குழந்தையை அழைக்க வரும் தம்பதி, வரமாட்டேன் என்ற அவளது முரட்டு பிடிவாதத்தால் நிலைகுலைந்து போகிறார்கள். பெற்ற அப்பா மீதே பிள்ளையை கடத்தியதாக போலீசில் புகார் கொடுக்கிறான் மகன். ஸ்ரீலட்சுமியோ தனக்கு அப்பா அம்மாவுடன் செல்ல விருப்பம் இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறாள். முடிவு என்ன என்பதுதான் அதிர்ச்சி.
வண்ணத்துப்பூச்சியின் மென்மையோடு அறிமுகமாகிறாள் குழந்தை ஸ்ரீலட்சுமி. ஆனால் இவளின் சிறகுகள்தான் இந்த மொத்த படத்தையும் து£க்கி சுமந்திருக்கிறது. துறுதுறுப்பான துள்ளலும், துளிர் விடும் துக்கமுமாக அவள் காட்டும் எக்ஸ்பிரஷன்ஸ் ஏகாந்தம்.
இன்னொரு சுமைதாங்கி பாலாசிங். பேத்தியின் குழந்தை மனசோடு ஒரு குழந்தையாக அவர் கலந்துவிடுவது யதார்த்தம். அப்பா, அம்மாவே வேண்டாம் என்று குழந்தை சொல்வதும், அதை தாத்தா ஆமோதிப்பதும்தான் சற்றே அதிர்ச்சி.
ரிட்டையர்டு ஆசிரியராக நடித்திருக்கும் ஓவியர் அமுதபாரதி, தனது ஓவியம் போலவே நிறைவாக செய்திருக்கிறார் இந்த புது வேலையை. நகரத்து பள்ளிகளுக்கு சற்றும் தாழ்ந்ததல்ல கிராமத்து பள்ளிகள் என்ற தொணியை உருவாக்க முயல்கிறார்கள் அனைவரும். ஆனால் அதுதான் எதார்த்தமா என்பதற்கு வெவ்வேறு விதமான விவாதங்கள் வரக்கூடும்.
இவர்களை தவிர படத்தில் வரும் எல்லாருமே அந்த நிமிடத்தில்தான் நடிப்பு பழகியிருக்கிறார்கள். குறிப்பாக குழந்தையின் அம்மாவாக நடித்திருக்கும் சித்ரா, சுத்தம்! தன்னை படிக்க வைத்து ஆளாக்கிய அப்பாவிடம் அருண் அவ்வளவு முரட்டு கோபம் காட்டுவது ஏன்? சின்ன பிளாஷ்பேக்கிலாவது விவரித்திருந்தால், நம்பும்படியாக இருந்திருக்கும்.
நீதிபதியாக வரும் ரேவதியின் தீர்ப்பு பற்றி நிச்சயம் விவாதிக்க வேண்டும், நீதிமன்ற அவமதிப்பாக கருதினாலும் கூட. குறைந்த பட்ச மருத்துவ வசதிக்கு கூட லாயக்கில்லாத அந்த கிராமத்தில் பெண் துணை ஏதுமில்லாத வீட்டில் ஒரு குழந்தையை தங்க வைக்க உத்தரவிடுவது சினிமாவுக்கு வேண்டுமானாலும் பொருத்தம். நிஜத்தில்?
ரேஹான் இசையில் பாடல்களும், பின்னணியும் இதம்.
எண்ணத்தை குழைத்த அழகப்பன்சி, கூடுதலாக கொஞ்சம் வண்ணத்தையும் குழைத்திருந்தால், வண்ணத்துப்பூச்சியின் கலர்களில் ஒன்றிரண்டு மிஸ்சாகாமல் இருந்திருக்கும்.
-ஆர்.எஸ்.அந்தணன் |