|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
செல்வராகவன், சோனியாவுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது - கருணாநிதிக்கு அம்பேத்கர் சுடர் என்ற விடுதலை சிறுத்தைகளின் விருது அறிவிப்பு - அதிமுக முன்னாள் தமிழக அமைச்சர் வீ.சுப்பிரமணியன் மரணம் - ஒபாமா நோபல் பரிசு பணத்தை தானமாக வழங்கினார் - புதிய சட்டசபை கட்டிடம் நாளை திறப்பு: பிரதமர் மன்மோகன்சிங், சோனியா வருகை - சென்னையில் 20 ரேஷன் கடைகளில் “வெப்”கேமரா வசதி: ரவுடி மாமூல், பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை - திபெத்தில் புத்த மதத்தை அழிக்க சீனா முயற்சி : தலாய்லாமா
விமர்சனம்

பட்டாளம்
Pattalam

காதல், காலேஜிலிருந்து மெல்ல மெல்ல ஸ்கூல் லெவலுக்கு இறங்கி வருவதை ஆபாசமில்லாமல் (இதானே பலருக்கு வர மாட்டேங்குது) சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரோஹன் கிருஷ்ணா! பசங்களின் பாய்ச்சலும், பயங்கர கூச்சலுமாக படம் நகர்ந்தாலும், தேவையா இந்த டிராஜடி? என்ற கேள்வியோடு வெளியே வருகிறார்கள் ரசிகர்கள்.

ஒரு ஸ்கூல், இரு கோஷ்டிகள். அடிக்கடி சண்டை வருகிறது இவர்களுக்குள். 'பசங்கன்னா அப்படிதான்' என்ற லாஜிக்கோடு அவர்களை கையாள்கிறார் நதியா மிஸ்! அதே பள்ளிக்கு படிக்க வருகிற மாணவி ஒருத்திக்கும், மாணவனுக்கும் காதல் வர, கூடவே சந்தேகமும் வருகிறது அவனுக்கு. தனது காதலியுடன் மனம் விட்டு பேசும் சக நண்பனையே போட்டுத்தள்ள முடிவு செய்கிறான். வன்முறையின் இருபக்கமும் இருக்கிற கூர்மை மாணவர் தரப்பை பதம் பார்க்க, ஆழ்ந்த வருத்தத்துடன் முடிகிறது படம்!

நதியா என்ற ஏடிஎம் கார்டை வைத்துக் கொண்டு, ஏழையாகவே இருக்கிறது திரைக்கதை! கால்ஷீட் வாங்கியாச்சே என்பதற்காகவே அவரை குறுக்கும் நெடுக்குமாக அலைய விடுகிறார்கள். அவர் பிரின்சிபாலா, டாக்டரா, அல்லது பார்ட் டைமாக பசங்களை மேய்ப்பவரா? அல்லாடுகிறது கேரக்டர்! போட்டி நேரத்தில் தன்னை கேவலப்படுத்திய சக ஆசிரியர்கள் முன்னிலையில் பசங்களின் வெற்றியை கொண்டாடுகிற நேரத்திலும், வகுப்பறையில் கசாப்புக்கடை கத்தி போலவே நடந்து கொள்ளும் ஆசிரியருக்கு சீட்டு கிழிக்கும் நேரத்திலும், ஏக மனதாக வெற்றியடைகிறார் நதியா மேம்!

பசங்களில் பாலாஜி தேறிவிடுவார். ஆட்டத்திலும் நடிப்பிலும் அப்படியரு துறுதுறு... சாகிற நேரத்தில் கூட, 'அந்த பெல்லை அப்பவே வித்துடலாம்னு சொன்னேன்' என்று அவர் முனகுவது வலி! சுவர் இல்லாத சித்திரங்கள் சுமதியை நினைவுபடுத்துகிறார் ஹீரோயின் கிருபா. நடிப்பில் ஸ்கூல் டிராமா சாயல் என்றாலும், அந்த பிஞ்சு முகத்திற்காகவே பொறுத்துக் கொள்ளலாம். ஊட்டியில் தற்கொலைக்கு முயலும் இர்ஃபானின் செயல் வலிய திணிக்கப்பட்டது. இதற்கு சப்பை கட்டு கட்ட நினைக்கும் இவரது அம்மா கேரக்டர், இடிந்து விழும் பங்களாவை ஈர்க்குச்சியால் தாங்கி பிடிப்பது ரொம்பவே வீக்!

பட்டாளத்தின் பரவசமே பாடல்கள்தான். ஜாசி கிஃப்ட்டின் இசையில் முதல் பாதியில் வரும் மூன்று பாடல்கள் துள்ளல்! குறிப்பாக நெல்லை பாரதியின் 'இஸ்பகராரா...' இருட்டுக்கடை இனிப்பு!

சிரிக்க சிரிக்க வரணும்னு நினைச்சு, ஆனா அதை சீரியஸா முடிச்சு, இறுதியில் சீரியலாகவே ஆக்கிவிட்டார் இயக்குனர் ரோஹன் கிருஷ்ணா! மாணவர்களுக்கு மட்டுமல்ல, இயக்குனருக்கும் இது கனாக்காணும் காலங்கள்தான் போலிருக்கிறது!

-ஆர்.எஸ்.அந்தணன்

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter