அஞ்சு தடிப்பசங்க, ஒரு அழகான பொண்ணு... இந்த கலாட்டா கதையை வைத்துக் கொண்டு அசால்ட்டா மனசை துவைச்சு காயப்போட்ட ராபர்ட் ராஜசேகரனின் பாலைவனச்சோலையை மெனக்கட்டு ரீமேக்கியிருக்கிறார்கள். நல்லவேளை, 'ரண'க்கட்டு குறைவுதான்!
ஒவ்வொரு காட்சிகளையும் பழசோடு ஒப்பிடவே தோணுவதால் நாற்பதை தாண்டியவர்களுக்கு(மட்டும்) சோலைவனப் பாலை. புதுசாக பார்ப்பவர்கள் தலைப்பின் பசுமையை படத்தில் உணரலாம்.
நிதின் சத்யா, சஞ்சீவ், சாம்ஸ், அபிநய், சத்யன் இவர்களுடன் கார்த்திகா. பொருத்தமான நடிகர்கள் அமைந்திருந்தால் பொங்கலில் முந்திரியாக இருந்திருக்கும். (பாவம், பட்ஜெட் நெருக்கடி, அதனாலேயே பல காட்சிகள் போதும்டா எந்திரி) காலத்திற்கேற்ப தொழில் நடத்தும் ஐவரும் தெருமுனை நண்பர்கள். மதில் சுவர் மாநாட்டில் ஒவ்வொரு நாளும் கலகலப்பாகிற நேரத்தில்தான் எதிர்வீட்டு ஏஞ்சலாக வந்து சேர்கிறார் கார்த்திகா. ஏஞ்சலுடன் ஊஞ்சலாட ஆசைப்படும் ஐந்து பேரும் ஆளுக்கொரு பிட்டை போட, நிதின் சத்யாவுக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம். ஆனால் அவரையும் கல்யாணம் செய்ய முடியாதளவுக்கு கார்த்திகாவுக்கு உடல்ரீதியான கோளாறு. நண்பனின் தங்கைக்கே காதலனை தாரை வார்க்கிற கார்த்திகாவின் முடிவை கண்ணீரோடு அறிவித்து சுபம் போட்டுக் கொள்கிறது படம்.
கண்களில் சோகமும், கவனத்தை சிதறடிக்கும் அழகுமாக வந்து நிற்கும் கார்த்திகாவின் கடைசி நிமிடங்கள் கண்கலங்க வைத்திருப்பது நிஜம். காதலை வெளிப்படுத்தும் ஒவ்வொருவரையும் கவனமாக கழற்றிவிடுகிறாரே, நசுங்கடிக்காத நாகரிகம்.
ஐவரையும் ஒரு தராசில்தான் வைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் நிதின் சத்யாவின் தட்டில் மட்டும் கொஞ்சம் வெயிட். அதையும் மிஸ் பண்ணாமல் யூஸ் பண்ணியிருக்கிறார் நிதின். அரவாணி வேடத்தில் நடித்தும் இருக்கிறார் இயக்குனர் எஸ்.தயாளன். 90 மார்க் தரலாம்.
சாம்ஸ் சிரிக்க வைக்க முயல்கிறார். ஆனால் அவரை ஓரம்கட்டிவிட்டு வழக்கம் போல ரசிகர்களை தனது வாய்(?)ஜாலத்தால் கட்டிப் போடுகிறார் வெண்ணிறாடை மூர்த்தி.
மேகமே மேகமே பாடலுக்கு முன்பாக வரும் அந்த ஹம்மிங் மனசை எங்கோ இழுத்துக் கொண்டு போகிறது. அந்த அற்புதமான பாடலுக்காக தியேட்டரே காத்துக் கொண்டிருக்கிறது. நல்லவேளை, ஏமாற்றவில்லை. அந்த ஒரு பாடலை மட்டும் காட்சி படுத்தியிருக்கிற விதத்தில் வழிந்தோடுகிற சோகம் நம்மையும் தொற்றிக் கொள்வது இயக்குனரின் சாமர்த்தியம்.
மூர்த்தியின் ஒளிப்பதிவும், இ.கே.பாபியின் இசையும் முழுமை.
ரீமேக் பண்ணுறதுதான் ரொம்ப கஷ்டம் தெரியுமா என்று ரீமேக்கர்கள் அலுத்துக் கொள்வதை நெஞ்சார உணர வைத்திருக்கிறார் தயாளன். மெய்யாலுமே கஷ்ஷ்ஷ்டம் சாரு...
-ஆர்.எஸ்.அந்தணன் |