நிழல் உலகத்தின் நிஜங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறது அயன். "என்னாது, அம்பது கோடி வைரத்தை கஸ்டம்ஸ் பிடிச்சிடுச்சா...?" என்று ஒன்றரையணா போனில் அதிர்ச்சியடையும் வில்லன்களையும், மாஃபியாக்களையுமே பார்த்து ரசித்த தமிழ் சினிமா ரசிகனுக்கு, கேவி.ஆனந்தின் காஸ்ட்லி பிரசண்டேஷன் கொல குத்துதான்!
இடைவேளைக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்புவரை, 'ஆமாம், கதைன்னு ஒன்ன சொல்லணுமில்லே' என்று திடீர் நினைப்போடு முனைப்பு காட்டும் இயக்குனர்கள் மத்தியில், முதல் ரீலிலேயே விர்ர்ர்ர்ரென்று கதைக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறார் ஆனந்த். பிறகென்ன...? படத்தின் கடைசி ரீலுக்கு தடதடவென்று ஓட வைக்கிறது திரைக்கதையும், அதன் சுவாரஸ்யங்களும்.
சென்னை ஏர்போர்டில் வந்திறங்கும் சூர்யா, பேசுகிற முதல் சில டயலாக்குகளில் அநியாய டீசண்ட், கௌதம் மேனன் பட மோகம் தம்பிக்கு போகலீயோ என்கிற மாதிரி...! ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தால், அட, பக்கா லோக்கலு! ரஜினி பட டிவிடியை அழகாக அடித்துக் கொண்டு வெளியே வரும் டெக்னிக், அசத்தல். இந்த கும்பல் பெரிய விநியோகஸ்தர் வட்டாரத்தையே மெயின்ட்டெய்ன் பண்ணுவது அதிர்ச்சி.
இப்படியாக கோதாவில் இறங்குகிற தாதாக்கள் வேடத்தில் சூர்யாவும், பிரபுவும். ஆப்பிரிக்காவின் காங்கோ வரை போய் வைரம் கடத்திக் கொண்டு வரும் சூர்யா, அதை எப்படி (ஏர்போர்ட் அதிகாரிகளின் கண்ணில் மண்ணை து£வி விட்டு) வெளியே கொண்டு வருகிறார் என்பதை பார்த்துக் கொண்டிருக்கும்போதே இயல்பாக கதைக்குள்ளே நுழைகிறான் வில்லன். (ஆகாஷ்தீப் செகால்) இரண்டு கோஷ்டிக்கும் மோதல். இடையிலே சூர்யாவுக்கு காதல். வில்லனை போட்டுத் தள்ளி விட்டு ஹீரோ ஜெயிக்கிற வழக்கமான முடிவு. ஆனால், கலக்கலான படம் என்ற நிறைவோடு வெளியே வருகிறோம்.
கோடம்பாக்க ரேசில் சூர்யாவின் ஓட்டத்தை இனி மற்றவர்கள் தொடரதான் முடியும் போலிருக்கிறது. சமீபகாலமாக அவரது கதை தேர்வும், மெனக்கெடலும் அற்புதம். அதிலும் காங்கோவின் இருட்டு வீதிகளில் சூர்யாவின் ஓட்டம் இருக்கிறதே, ஆங்கில பட ஹீரோக்களையே மிஞ்சிவிட்டார். தமன்னாவிடம் காதலில் வழியும் நேரத்தில் மறுபடியும் ரொமான்ட்டிக் ரேஸ். ஜெகன் மீண்டும் ஒரு சிகப்பு விளக்கு வீட்டில் புகுந்து விட்டதாக நினைத்து, அவரது சொந்த வீட்டிலேயே சூர்யா 'கை வைப்பது' நமக்கு சொரேர். ஆனால் ஜெகனுக்கு ஜிலீர்... (என்னய்யா அண்ணன்?)
சில காட்சிகளே வந்தாலும், அசையாத து£ண் மாதிரி நிற்கிறார் பிரபு. போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரிடம் இவர் காட்டும் கோபம், பலத்த கைதட்டல்களை அள்ளிக் கொள்கிறது.
இந்த படத்தின் ஒரே மைனஸ் தமன்னாதான்! அவர் காட்டும் கோபத்திலும், காதலிலும் செயற்கையின் சதவீதம் ஜாஸ்தி. நடிப்பது எப்படின்னு நாலு மாச கோர்ஸ் இருந்தா படிக்கலாம்.
சின்னத்திரை ஜெகனுக்கு இனி ஒரேயடியாக பிரமோஷன்தான். திடீர் எட்டப்பனாக இவர் மாறுவது யூகிக்க முடியாத விஷயம். ஆனால், இத்தனை பெரிய கடத்தல்காரர்கள், சம்பந்தமில்லாத ஒருவனை நம்புயது எப்படியாம்? இடிக்கிறதே பாஸ். கடத்தலுக்காக போதை குப்பிகளை விழுங்கி, அது வயிற்றிலேயே வெடித்து சிதறி, சாகும்போது ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார் ஜெகன். இது துரோகிகளுக்கு கிடைக்காத பரிசு. ஆச்சர்யம்!
எந்நேரமும் பைல்ஸ் வந்த மாதிரி ஒரு வில்லன். இவரது கேரக்டரை கொஞ்சம் 'பட்டி' பார்த்திருக்கலாம்! சேரி பாஷை பேசும் ரேணுகா புதுசு.
வசனங்களில் ஆயிரம் கூர்மை தெரிந்தாலும், ஜெகன் பேசும் சினேகா, நமீதா வசனத்திற்கு கொஞ்சம் கூடுதலாகவே விசில் உற்சவம் நடத்துகிறார்கள் ரசிகர்கள். இன்னொரு காட்சியில் எனக்கு ஜோ போதும்ங்கிறாரே சூர்யா, அதற்காகவும்தான்!
திரைக்கு முன்னால் மட்டுமல்ல, திரைக்கு பின்னாலும் உழைத்திருக்கிற டெக்னீஷியன்கள் அசத்தல் மன்னர்களாகியிருக்கிறார்கள். குறிப்பாக ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஒளிப்பதிவாளர் எம்எஸ்.பிரபு இருவரும். பாடல்களில் இரண்டு (மட்டும்) ஹம்மிங் லிஸ்ட்!
அயன்-கம்பீரம்.
-ஆர்.எஸ்.அந்தணன்
|