அடடா என்ன செலவு என்று வைத்திருக்கலாம்! காட்சிக்கு காட்சி கலர்ஃபுல்! கதையும் அப்படியிருந்தால் சந்தோஷம் கிட்டியிருக்கும். 'கும் கும்' என்று படம் முழுக்க கும்மாங்குத்து விட்டுக் கொண்டேயிருக்கிறார் இயக்குனர் ஜெயமுருகன். அதையும் மீறி அவ்வப்போது வந்து ஒத்தடம் கொடுக்கிறது நிக்கோலின் கவர்ச்சி!
மருத்துவக் கல்லூரிக்குள் நடக்கும் கெமிஸ்ட்ரிதான் கதை. ஜெய் ஆகாஷ¨க்கு நிக்கோல் மீது முதல் பார்வையிலேயே காதல். இசை பிரியர்களான இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த, மத்திய அமைச்சரான ஆசிஷ், இந்த காதலுக்கு ஆசிட் ஊற்றுகிறார். இவர்தான் நிக்கோலின் அப்பா. இத்தனைக்கும் விபத்துக்குள்ளான நிக்கோலை ஆகாஷின் அப்பா சரத்பாபுதான் காப்பாற்றுகிறார். 'என்ன வேணும்னாலும் கேளுங்க. தர்றேன்' என்கிற ஆசிஷ், பெண் கேட்டு வரும் சரத்பாபு குடும்பத்தை வாசலிலேயே விரட்டி அடிக்கிறார். அந்தஸ்தும், அதிகாரமும் காதலுக்கு குறுக்கே நிற்க, ஜோடிகள் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.
ஒரு டிரெம்பட்டை வைத்துக் கொண்டு படம் முழுக்க ஊதிக் கொண்டே இருக்கிறார் ஆகாஷ் ஜெய். காலேஜ் கேம்பசுக்குள் அமர்ந்து நாலு கி.மீட்டருக்கு கேட்கிற மாதிரி விசில் அடித்துக் கொண்டே இருக்கிறார். காதலியை பார்க்கும் போதெல்லாம் கும் கும் என்கிறார். அதோடு சரி, வேணாம்னு ஒதுக்கிய மாமனாரை காலில் விழ வைக்கிற மாதிரி ஏதாவது செய்ய வேண்டாமோ?
ஒரு சீனில் கோல்டு மெடல் வாங்குகிறார் நிக்கோல். படிப்புக்காவாம்... அப்படியே கவர்ச்சிக்காக ஒரு மெடல் கொடுக்கலாம்! நின்றால் கவர்ச்சி. நிமிர்ந்தால் மிரட்சி. தெளிவாதான் போட்றாங்க ரூட்டை!
படத்தில் கருணாசும் இருக்கிறார். மத்திய அமைச்சருக்கு மெய்காப்பாளர்களாக வருகிற இருவரில் ஒருவர் சிட்டிபாபு. ஏனோ சீரியஸ் பாபுவாகிவிட்டார்.
அடடா என்ன அழகு என்ற ஒரே வரியை கொண்டு ஒரு பாடல் அமைத்திருக்கிறார்கள். அழகு! பாராட்ட வேண்டிய நபர் கிச்சாஸ். கண்களில் ஒத்திக் கொள்ள வைக்கும் ஒளிப்பதிவு. இன்னொருவர் தயாரிப்பாளர். கடலில் இறங்கிட்டோம். திமிங்கலமாக இருந்தாலும், தீனி போட்டுதானே ஆகணும் என்ற பாலிசிக்காரர் போலிருக்கிறது. அள்ளி அள்ளி இறைத்திருக்கிறார் பணத்தை.
திரைப்பட கல்லூரியில் பாடமாக இருக்க வேண்டிய படம். திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை இதை பார்த்தாவது தெரிந்து கொள்வார்கள் அல்லவா?
-ஆர்.எஸ்.அந்தணன் |