விருந்துக்கு முன்பு தரும் வெல்கம் டிரிங்க் மாதிரி மெயின் படத்தை துவங்கும் முன்பே ஒரு ஜோடியை காட்டுகிறார்கள். நரம்பை முறுக்கேற்கிறது இந்த ஜோடி. அவர்களை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு இன்னொரு ஜோடியை நோக்கி தாவுகிறது கேமிரா. இது இரண்டாவது ஜோடியின் ஹனிமூன்! அவர்களுக்கு அது ஹனிமூனா? சனிமூனா? திடுக்கிட வைக்கும் மிரட்டல்களுடன் கதை நகர, மோனிகாவின் முன்னழகை ரசிகர்களின் கண்களுக்குள் விதைத்த திருப்தியோடு சுபம்!
ஜோடிக்கு தனிமை தேவைதான். அதற்காக அந்த தீவு பங்களாவுக்கா வரவேண்டும்? திரும்புகிற இடமெல்லாம் இருட்டு. சில இடங்களில் மௌனத்தையே இசையாக்கி உலுக்கி எடுக்கிறார் இசையமைப்பாளர். சிறப்பு சப்தங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது படத்தை இன்னும் விறுவிறுப்பாக்குகிறது.
புது மனைவியை விட்டுவிட்டு அக்கரையில் இருக்கும் நண்பனிடம் வயாக்ரா வாங்க போகும் கணவர் முன்னா, திரும்பி வரும்போது மனைவி பயத்தில் நடுங்கி போயிருக்கிறார். ஆறுதல் சொல்ல வேண்டிய புருஷப்பூனை, பணியாரத்திலேயே குறியாக இருக்கிறது. நல்லவேளை. வசனங்களை அழுத்தமாக பேச வைத்து ஜோடி கூடுவதை தள்ளிப் போடுகிறார் இயக்குனர் ஆதி. ஒருவேளை சேர்ந்து விட்டால் காலையிலேயே பெட்டியை கட்ட வேண்டியதுதானே என்ற கேள்வி வருமில்லையா? ஆனாலும், அவர்கள் அங்கிருந்து கிளம்ப முடியாதபடி படகுக்காரன் லீவ்!
அடுத்தடுத்த நாட்களில் தனது தோழிகள் ஒவ்வொருவராக கொல்லப்படுவதை அறிகிற மோனிகா, பயத்தில் தவித்துக் கொண்டிருக்க, இவர்கள் தங்கியிருக்கும் பங்களா வாட்ச்மேனும் கொடுரமாக கொல்லப்பட்டு கிடக்கிறான். (மரியாதை தெரியாத வாட்ச்மேன், சாகட்டும்... என்று தியேட்டரில் கொலைகாரனுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் ரசிகர்கள்) தப்பித்து ஓட முயலும் மோனிகாவை கொல்ல முயலும் சக்தி எது? பிளாஷ்பேக்...
கவர்ச்சிப் பதுமை. கட்டுடல் மோகினி. இப்படி சகட்டு மேனிக்கு பட்டம் கொடுக்கலாம் மோனிகாவுக்கு. உடை விஷயத்தில் எப்படி தாராளமோ? அப்படியே 'எடை' விஷயத்திலும் இருப்பதால், ஈரம் சொட்ட நிற்கிற எல்லா காட்சிகளிலும், பாரத்தையும் நினைக்க வைக்கிறார். கொஞ்சம் இளையுங்கள் மோகினி.
அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை படத்தின் ஹீரோ முன்னா.
வில்லனாக நடித்திருக்கும் சந்துருவுக்கு இயல்பான முகம். எதார்த்தமான நடிப்பு. தொழில் எல்.ஐ.சி ஏஜண்ட். கமிஷன் கிடைக்கும் என்று நம்பி ஒரு இடத்துக்கு போகிறார். அங்கே நடப்பதுதான் கதையின் விவாதத்திற்குரிய பகுதி. சாஃப்ட்வேர் பெண்களின் கலாச்சார சீரழிவை கொஞ்சம் நேரடியாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆதி. இவரும் பத்திரிகையாளர் என்பதால் பத்திரிகைகளை சாட்சிக்கு அழைத்துக் கொண்ட இவரது புத்திசாலித்தனம் மெச்சக்கூடியதே! ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சில தவறுகளை மையமாக வைத்தே ஒரு திரைப்படத்தை எடுப்பது சரியா?
இந்த திகில் கதையை சிறப்பாகவே எழுதியிருக்கிறது பவுசியாவின் கேமிரா. பின்னணி இசையில் மட்டுமல்ல. பாடலிலும் ரசனையை வெளிப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் கார்த்திக்.
17 முறை தோற்ற கஜினி முகமதுவையே வெற்றி பெற வைத்த சிலந்தி, இந்த இளம் படைப்பாளிகளையா கைவிட்டு விடும்?
-ஆர்.எஸ்.அந்தணன்
|