ஆறு மாத குழந்தைக்கு ஆறடி உயரத்தில் ஜிப்பா தைத்த மாதிரி, பொருந்தாத பிரமாண்டம்! பத்து வேடங்களில் நடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை, கமல் தனது திரைக்கதையிலும் காட்டியிருந்தால் அவரை நிஜமான அவதார புருஷராகவே கொண்டாடியிருக்கலாம்! பட், பில்டிங் ஸ்டிராங்...பேஸ்மெண்ட் ரொம்ம்ம்ம்ப வீக் சாமி!
12 நூற்றாண்டில் துவங்குகிறது கதை. சிதம்பரம் கோவிந்தராஜர் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கும் குலோத்துங்க சோழன், அதற்கு தடையாக இருக்கும் ரங்கராஜன் நம்பியை கழு மரத்தில் ஏற்றி சித்ரவதை செய்கிறார். இந்த வைணவ, சைவ மோதலில் கோவிந்தராஜர் சிலையோடு ஜல சமாதியாகிறார் நம்பி. அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்குள் பயணித்து மேலும் பட்ஜெட்டை எகிற வைக்காமல் நேரடியாக 21-ம் நூற்றாண்டுக்கு பயணிக்கிறது கதை.
அமெரிக்க விஞ்ஞானியான கமல் கோடிக்கணக்கான உயிர்களை அழிக்கும் வைரஸ் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அதை தீவிரவாதிகளிடம் விற்க முயல்கிறார் விஞ்ஞானிகளின் தலைவர். இதை தடுக்க நினைக்கிறார் கமல். இந்த களேபரத்தில் தவறுதலாக இந்தியாவுக்கு வந்து விடுகிறது வைரஸ். அதை துரத்திக் கொண்டு பின்னாலே வரும் விஞ்ஞானி கமலும், வில்லன் கமலும் மோதிக்கொள்கிறார்கள். கதையை நகர்த்திச் செல்லும் மிச்ச சொச்ச கேரக்டர்களிலும் கமலே நடிக்க, இதுதான் கதை என்று புரிந்து கொள்வதற்குள் நம்மை இருந்த இடத்திலேயே வைத்து சப்பாத்தி போடுகிறார் கமல்!
முகத்தில் மாஸ்கை மாட்டி (உபயம்- ஹவ் டு மேக்கிங் தசாவதாரம்) அதன் மேல் மேக்கப் போட்டுக் கொள்ளும் கமலால், குரலில் மட்டுமே வித்யாசத்தை வெளிப்படுத்த முடிகிறது. எக்ஸ்பிரஷன்களை வெளிக்காட்ட வேண்டிய பகுதிகள், இறுக்கமான பேஸ்ட்டுக்குள்! என்ன செய்வார் அவர்? ஹையோடா! ஆனாலும் அமெரிக்க ஜனாதிபதி புஷ், பூவராகவன், பலராம் நாயுடு வேடங்கள் பிரமிக்க வைக்கின்றன. உயரத்தை குறுக்கிக் கொண்டு பாட்டியாக வருகிற கமலை லாங்-ஷாட்டிலேயே காட்டியிருக்கலாம். குளோஸ்-அப்புக்கு வரும்போதெல்லாம் குய்யோ முறையோ என்று அலறுகின்றன குழந்தைகள்.
12-ம் நூற்றாண்டில் வருகிற அசின் பரிதாபப்பட வைக்கிறார். 21 -ம் நூற்றாண்டு அசின் கோபப்பட வைக்கிறார். சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் அவர் 'பெருமாளே பெருமாளே' என்று தவிப்பதும், ஓடுகிற ரயிலில் உள்ளே கூட போகாமல் படியில் தொங்கிக் கொண்டே அவர் விவாதிப்பதும் எரிச்சல்! அமெரிக்க வில்லன் கிரித் ப்ளட்சரை விட்டு விட்டு, விஞ்ஞானி கோவிந்தாவை தேடிப் போகும் பலராம் நாயுடு சிரிப்பு போலீஸ் மட்டுமல்ல. ஒட்டுமொத்த காவல் துறையையே நகைப்புக்கு இடமாக்கும் போலீசும் கூட!
கமலின் வசனங்களில் பிளேடின் கூர்மை! அழகிய சிங்கர் பற்றி அவர் அடிக்கும் கமெண்ட் பலரை கோபப்படுத்தக் கூடும்! பூவராகவன் கேரக்டர் பேசும் வசனங்களில் எரிமலை வெடிக்கிறது.
தொழில்நுட்ப விஷயங்களில் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட்டிருக்கிறார்கள். கமலின் பத்து அவதாரங்களுக்கு இணையாக உயர்ந்து நிற்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். அதிலும் அந்த ஓப்பனிங் காட்சி இந்திய திரைப்பட வரலாற்றின் மணி மகுடம்! வெல்டன் ரவிவர்மன். சுனாமி காட்சியில் ரவிவர்மன் கேமிராவும், கிராபிக்ஸ் தொழில் நுட்பமும் இணைந்து ஒரு மாயாஜாலத்தையே காட்டியிருக்கிறது.
அதிலும் கமலின் முதுகில் கொக்கியை மாட்டும் அந்த காட்சி கிராபிக்ஸ் என்றாலும் பயங்கரம். பாடல்களில் 'கல்லை மட்டும்' அற்புதம்! 'முகுந்தா முகுந்தா' இனிமை! ஹிமேஷ் இசை கொண்டாட வைக்கிற அதே நேரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையில் பெரிய விசேஷம் இல்லை!
கோடிக்கணக்கான பணத்தை அள்ளி அள்ளி இரைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். அதை முறையான கதையிலும், விறுவிறுப்பான திரைக்கதையிலும் பயன்படுத்தியிருந்தால், காலத்தால் அழிக்க முடியாத ஒரு படத்தை தந்திருக்க முடியும்! என்ன செய்வது? கமல், திரையுலகத்திற்கு வைக்கிற ஒவ்வொரு பூச்செண்டும், தயாரிப்பாளரின் பணத்திற்கு வைக்கிற மலர் வளையமாகவே மாறி விடுகிறதே!
-ஆர்.எஸ்.அந்தணன்
|