'நண்பன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இலியானா காட்டில் வாய்ப்பு மழையாகப்
பொழிந்து கொண்டிருக்கிறது. தெலுங்கில் சற்றே இறங்குமுகமாக இருந்த அவரது மார்க்கெட் மீண்டும் உச்சத்திற்குப் போய்விட்டதில் ஏக குஷியாக இருக்கிறார் இலியானா.
நண்பன் படத்தைப் பார்த்த போலிவுட் மன்மதன்கள் எல்லாம் தேடிவரும் இயக்குநர்களிடம், "எங்களுக்கு இந்தக் கிளிதான் வேண்டும்" என்று இலியானாவைச் சுட்டிக் காட்டுகிறார்களாம்.
நடிகர் அக்ஷய்குமார் அடுத்து நடிக்க உள்ள 'கிலாடி 786' படத்தில் இலியானாவை ஒப்பந்தம் செய்ய துடியாய்த் துடிப்பதாகக் கேள்வி. "எவ்வளவு சம்பளம் கேட்டாலும் பரவாயில்லை. அவரை எப்படியாவது ஒப்பந்தம் செய்யுங்கள்" என்று தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார் அக்ஷய்.
இதேபோல் இந்தி நடிகர்கள் இம்ரான்கான், அஜய் தேவ்கன் ஆகியோரது விருப்பப் பட்டியலிலும் இலியானாவுக்குதான் முதலிடம். இப்படி வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையிலும், "கொஞ்ச நாள் பொறுங்க, கால்ஷீட் தர்றேன்" என்று இலியானா சொல்லி வருவது, போலிவுட்காரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இலியானா இந்தியில் நடிக்கும் முதல் பட வேலைகள் இன்னும் முடிந்தபாடில்லை. அந்தப் படம் வெளியாகட்டும் என்று காத்திருக்கிறதாம் கிளி.
"தற்போது தெலுங்கில் ரவி தேஜாவுடன் ஒரு படம், அல்லு அர்ஜுனுடன் ஒரு படம் என்று பிஸியாக உள்ளார் இலியானா. அவரைப் பொறுத்தவரை இந்தி, தமிழ், தெலுங்கு என்று எல்லா மொழிப் படங்களும் ஒன்றுதான். தன் மனதுக்குப் பிடித்த கதை என்றால் மட்டுமே நடிக்கச் சம்மதிப்பார். இந்தியில் நடிப்பதற்கு அவசரப்படவில்லை" என்கிறார் அவரது மேனேஜர்.