|
திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவின் மகன் கபிலன் திருமணம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. எங்கெங்கு காணினும் கூட்டமடா என்பது போல திரும்புகிற இடமெல்லாம் தலைகள். சற்று தாமதமாக வந்த சத்யராஜ், டி.எம்.சவுந்தர்ராஜன் இருவருக்கும் மண்டபத்தின் வெளியே உட்காரதான் நாற்காலி கிடைத்தது. விழாவில் முக்கிய விருந்தினராக வந்திருந்தார் தமிழக முதல்வர் கலைஞர். மற்ற இருவர் ரஜினியும் கமலும்.
திருமணத்தை நடத்தி வைத்த பின்னர் முதல்வர் கலைஞர் பேசும்போது,
கவிப் பேரரசு வைரமுத்து கவிதை படித்தாலும், பேசினாலும் வாழ்த்தினாலும் ஒரே ஸ்டைலில்தான் இருக்கும். அவருடைய காதல் கவிதை வேண்டுமானால் மென்மையாக இருக்கலாம். ஆனால் அவருடைய பேச்சில், நடையில், உச்சரிப்பில் அதை காண முடியாது. மணமகன் கபிலன் எனக்கு மகன் போன்றவன் அவனிடம் காட்டும் அன்பு அளவிட முடியாதது. அண்மையில் கபிலன் எழுதிய புத்தகத்தை படித்தேன். அதில் தன் மனைவிக்கு இல்லத்துக்கு வரப்போகும் அரசிக்கு சில அறிவுரைகளை கூறி இருந்தார்.
உனக்கு பிடித்த சட்டை எனக்கு பிடித்த புடவை அடிக்கடி உடுத்தி கொள்ளும் தியாகம் தவிர்ப்போம். வெளியூர் புறப்படும் போது பதறி வந்து வழி அனுப்பாதே. வாசல் படி வரை வந்து சொல்ல வேண்டாம். சமையல் அறையில் நின்று கொண்டே சொல். பிரிவின் துயர் குறைப்போம். இந்த கவிதை வரிகள் இப்போது போற்றப்படாவிட்டாலும் எதிர் காலத்தில் போற்றப்படும் என்பதை புரிந்து கொண்டேன்.
வைரமுத்து எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர். இங்கு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வைரமுத்து எதையும் வெளியே சொல்ல மாட்டார் என்று குறிப்பிட்டார். சூப்பர் ஸ்டாரிடம் ஒன்றை சொல்லி கொள்வேன். உங்களை பற்றி வைரமுத்து என்னிடமும் சொல்லி இருக்கிறார். அதை இப்போது நான் சொல்ல மாட்டேன்.
எதை சொல்ல வேண்டுமோ அதை வைரமுத்து சொல்வார். வைரமுத்து என்றைக்கும் என் தம்பிதான். அவருக்கு நான் அண்ணனாக இருப்பேன். எங்கள் உறவை நான் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்றார். மணமகள் ரம்யா மதுரையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை மாயாண்டி திருச்சியில், மாஜிஸ்திரேட் ஆக உள்ளார். தாயார் மதுரை யாதவா மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றுகிறார். |