|
ஒரு ஹீரோ வருஷக்கணக்கில் பார்த்து பார்த்து உருவாக்கிய வீட்டுக்கு குடிபோவதை ஒரு திருவிழாவாக கொண்டாடுவதுதானே சரி. ஆனால் சைலண்ட்டாக காதும் காதும் வைத்தாற் போல ஷிப்ட் ஆகிவிட்டார் விக்ரம். ஒரு கொண்டாட்டம் இல்லை. கோலாகலம் இல்லை. ஆனால் மனசெல்லாம் மயிலிறகால் வருடி விட்ட மாதிரி இருக்கிறதாம் அவருக்கு இந்த வீட்டிலிருக்கும் போதெல்லாம். வேறென்ன, உழைப்பில் உருவானதாச்சே ஒவ்வொரு செங்கல்லும்!
ஒரு சிலரை விடுங்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்ட பல ஹீரோக்களுக்குள் இருக்கிற ஆசைதான் அவருக்குள்ளும். ஏற்கனவே தேசிய விருதுகள் வாங்கியிருந்தாலும், ராவணா படத்தின் மூலம் அதையும் கைப்பற்றி விடுவது என்பதில் வெறியாகவே இருக்கிறாராம் விக்ரம். தமிழில் ஹீரோ, இந்தியில் வில்லன். ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகளையும் அடுத்தடுத்து படம் பிடிப்பாராம் மணிரத்னம். ஆனால் இரண்டு காட்சிகளிலும் ஒரே விக்ரம், வேறு வேறு ஸ்டைலில் அசத்துவது கண்டு யூனிட்டே வாய் பிளந்து நிற்குமாம்.
இவ்வளவு சந்தோஷங்கள் இருந்தாலும், ஒரு வருத்தம் விடாமல் விரட்டிக் கொண்டிருக்கிறது சீயானை. வருடத்திற்கு மூன்று படங்கள் என்பது அவரது இலக்கு. ஆனால், அது சரியாக நடக்கவில்லையே என்பதுதான் அவரது தவிப்பு. இனிமேலாவது ரூட் க்ளியர் ஆகுதா பார்ப்போம்!
|