|
தன்னை ஒரு நாத்திகவாதி என்பதை ஆதவன் 100 வது நாள் விழாவிலும் அழகாக நிருபித்தார் கமல். "ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் மனதில் வைத்துக்கொள்கிற மாதிரி ஒரு மந்திரத்தை அண்ணன் கமல்ஹாசன் எனக்கு சொல்ல வேண்டும்" என்று முதலில் பேசும்போது கேட்டுக்கொண்டார் சூர்யா. தனது உரையில் இதை பற்றி குறிப்பிட்ட கமல், நாட்டில் பற்றியெறிந்து கொண்டிருக்கும் நித்யானந்தர் விவகாரத்தை லேசாக உரசிவிட்டு போனார்.
"சூரியா பேசும்போது, என்னிடம் மந்திரம் கேட்டார். அதுவும் என்னிடம் போய் மந்திரம் கேட்கிறார். நான் ஒரு சில சாமியார் மாதிரி. கடவுள் நம்பிக்கை கிடையவே கிடையாது. சூரியாவின் அப்பா என்னிடம் மந்திரம் சொல்ல எவ்வளவோ ட்ரை பண்ணி ஓய்ந்து போயிட்டார். இவர் என்னிடம் மந்திரம் கேட்கிறார்.
சினிமாவை இன்னும் நான் வியப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்த வியப்பு, திகில், பதற்றம், சந்தோஷம் எல்லாம் நிறைந்ததுதான் சினிமா. என் படம் வெளியாகிற அன்று முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போது, நான் படம் பார்ப்பவர்களின் முகத்தைத்தான் பார்ப்பேன். அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷம், உற்சாகம்தான் நிஜம்.
சினிமாவில் எழுத்தாளராக வேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஒருமுறை மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவுக்கு நான் போனபோது, அங்கிருந்த லைப்ரரியில் கலைஞர் எழுதிய ஸ்கிரிப்ட்டைப் பார்த்தேன். அதில், அத்தனை நுணுக்கமான விஷயங்கள் இருந்தன. அதை படித்த பிறகு, எழுத வேண்டும் என்ற ஆசையை ஆறு வருடங்களுக்கு தள்ளிப்போட்டேன். சினிமாவில், நடிகர்கள் மறக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஒரு விஷயத்தில் மட்டும் பயங்கர திமிராக இருக்க வேண்டும். உங்களின் முந்திய வெற்றியை நீங்கள் மதிக்கக் கூடாது.
எனக்கு, கமல் மீது மரியாதை கிடையாது. பதற்றம் உண்டு. என் முந்திய வெற்றியை சவாலாக எடுத்துக்கொள்வேன். தோல்வி பற்றி பயப்படக்கூடாது. கிரிக்கெட்டில் தோற்றால், அடித்துக்கொள்கிறார்களா என்ன? அடுத்த மேட்சுக்கு தயாராகி விடுகிறார்கள் அல்லவா? அதுமாதிரி இருக்க வேண்டும்.
நடிகர் திலகம் தொடர்ந்து 13 தோல்விப் படங்களை கொடுத்தார். வேறு யாராக இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள். அடுத்து வந்த 14-வது படம் 200 நாட்கள் ஓடியது. அது அவரால் மட்டும்தான் முடியும்...'', என்றார்.
இதையெல்லாம் மீறி கமல் சொன்ன இன்னொரு விஷயம் அற்புதம். சினிமாக்காரர்கள் ஆகிய நாங்கள் எல்லாம் ரயில்வே ஸ்டேஷன்ல பாசி மணி விக்கிற குருவிக்காரங்க மாதிரி. ரயில் வரும்போது பயங்கரமா அடிச்சுக்குவோம். இந்த கம்பார்ட்மென்ட் எனக்குதான். நீ அந்தப்பக்கம் போ என்றெல்லாம் சண்டை போடுவாங்க அவங்க. ஆனால் ரயில் போனதும் அதே மரத்தடியில் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சமைச்சி சாப்பிட ஆரம்பிச்சுருவாங்க. அப்படிதான் நாங்களும்.
இந்த படத்துக்கு விழா எடுத்த மாதிரி ஓடிய எல்லா படத்துக்கும் எடுக்கணும். சில பேர் அதை செய்யாம விட்டுடுறாங்க. நானும் கே.எஸ்.ரவிக்குமாரும் இருந்தா எதை பற்றியும் கவலைப்பட மாட்டோம். பயங்கர சிரிப்பும் கும்மாளமுமா செட் இருக்கும். ஆனால் தசாவதாரம் படத்தில எங்களால் அப்படி இருக்க முடியாதளவுக்கு சூழ்நிலை இருந்திச்சு. உதயநிதி தயாரிக்கும் படத்தில நாங்க பழைய சிரிப்போட இருக்க முடியும்னு நம்புறோம் என்றார் கமல்.
மகா கலைஞனாக இருந்தாலும் வலி பொதுவானதுதான் போலிருக்கு! |