|
விண்ணைதாண்டி வருவாயா படத்தின் விமர்சனங்கள் கவுதமுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த விடிவி குழுவிற்கே சந்தோஷத்தை அளித்திருக்கிறது. நன்றி சொல்லும் விதமாக உதயநிதி, கவுதம், சிம்பு, த்ரிஷா, கணேஷ் ஆகியோர் மீடியாவை சந்தித்தார்கள். இந்த படத்திலே நீங்க அழகா இருக்கீங்க. ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா? என்று முதல் கேள்வியிலேயே ஐஸ்கிரீமை வழிய விட்டார்கள் பத்திரிகையாளர்கள். முன்பை விட மெச்சூரிடியாக பேச கற்று வைத்திருக்கிறார் சிம்புவும்.
அண்ணே, இந்த படத்தோட விமர்சனத்தை பார்த்து நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏன்னா என்னோட எல்லா படங்களுக்கும் எங்காவது ஒரு இடத்திலாவது ஏதாவது குறை சொல்லி எழுதியிருக்கீங்க. ஆனா இந்த படத்துக்கு மட்டும்தான் எல்லா விமர்சனத்திலேயும் சொல்லி வச்ச மாதிரி என்னோட நடிப்பை முழுமையா பாராட்டியிருந்தீங்க. அதுதான் நான் அழகாயிருக்கறதுக்கு காரணம் என்றார் சிம்பு.
படத்தில் தனக்கும் த்ரிஷாவுக்கும் இடையே இருக்கிற கெமிஸ்ட்ரி நிஜத்தில் சாத்யமாக வாய்ப்பு இல்லை என்றும் கூறினார் சிம்பு. த்ரிஷாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டாலும், ஒரு கேள்வி நெத்தியடி.
நடிகைகள் பலர் ஆசிரமத்திற்கு போய் சாமியார்களிடம் ஆசி வாங்குகிறார்களே? உங்களுக்கு அந்த பழக்கம் இருக்கா? இதற்கு த்ரிஷா சொன்ன பதில் இருக்கிறதே, அது சுத்தியடி!
எனக்கு அதிலேயெல்லாம் நம்பிக்கை இல்லை. மீடியா அவங்க வேலையை செய்யுறாங்க. அதை தடுக்க முடியாது. நாமதான் ஜாக்கரதையா இருக்கணும். அவங்களுக்கு பயப்படணும் என்றார்.
இந்த கதை உண்மை கதையா என்ற கேள்வி கவுதமிடம் கேட்கப்பட்டது. எனக்கும் கொஞ்சம் கிரடிட் கொடுங்க. இது என் கற்பனை கதைதான் என்றார் கவுதம். |