|
வடிவேலு கொடுத்த புகாரை அடுத்து தலைமறைவான சிங்கமுத்து ஒருவழியாக நீதிமன்றத்தில் சரணடைந்ததார். தினமும் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் ஜாமீனில் விடப்பட்டவர், நேற்று போலீஸ் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கு அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்பு நிருபர்களிடமும் பேசினார் சிங்கமுத்து.
வடிவேலு புகார் கொடுத்தவுடனேயே போலீசாரிடம் வர நினைத்தேன். வடிவேலு கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். இப்போது போலீசாரிடம் சென்றால் அவர்களது கடமையை செய்வர். எனவே முன்ஜாமீன் வாங்கக் கொண்டு போலீசாரிடம் செல்லலாம் என எனது வக்கீல் தெரிவித்தார். அதன்படி முன்ஜாமீன் பெற்று தற்போது போலீசாரிடம் வந்துள்ளேன்.
வடிவேலு பணபலம் மற்றும் வசதி படைத்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த என்னை போன்ற சாதாரண நடிகனை கோர்ட்டும் போலீசாரும்தான் காப்பாற்ற முடியும். நிலத்தை விற்றது, வாங்கியது வடிவேலுவின் மேனேஜர்தான். நான் வெறும் காமெடி நடிகர். வடிவேலுவிடம் வரும் பத்து பதினைந்து காமெடி நடிகர்கள் போல நானும் காமெடி ஸ்கிரிப்ட் எழுதி தருவேன். வடிவேலு நிலத்தை யார் விற்றது என்றும், தாலுக்கா அலுவலகத்தில் நிலம் எங்கிருக்கிறது என்றும் விசாரிக்கட்டும். நான் சர்வேயர் அல்ல. இதற்கு நான் பொறுப்பல்ல என்றார் சிங்கமுத்து.
வடிவேலுவின் மேனேஜர்கள் தொடர்ந்து இறந்ததை காவல் துறை விசாரிக்க வேண்டும் என்றும் அப்போது கூறினார் சிங்கமுத்து. |