|
வெளிவருவதற்கு முன்பே சர்ச்சைக்குரிய படமாகிவிட்டது ரத்தசரித்திரா. இலங்கையில் நடந்த ஐஃபா விழாவுக்கு பின்னர் சில இந்திப்பட ஹீரோக்களின் படங்களை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதித்திருந்தன திரைப்பட அமைப்புகள். இது சினிமா விஷயம்தானே, நமக்கென்ன என்று ஒதுங்கிக் கொள்ளாமல் மே 17, தமிழின பாதுகாப்பு இயக்கம் போன்றவையும் இந்த விவகாரத்தில் தலையிட்டதால் விவேக் ஓபராயும், சூர்யாவும் இணைந்து நடித்த ரத்த சரித்திரா காயமின்றி வெளியே வருமா என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்தது. நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மட்டும் இது என் தம்பி படம் என்று ஒதுங்கிக் கொண்டதை ரசிகர்கள் அறிவார்கள். இந்த நிலையில்தான் இந்த திருப்பம் நிகழ்ந்துள்ளது.
வல்லவனுக்கு புல்லு மட்டுமல்ல, புத்தியும் யுக்தியும் கூட ஆயுதம்தான் என்பதை நிருபிக்கும் விதமாக படத்தை துரை தயாநிதியின் கிளவுட் நைன் நிறுவனத்திற்கு விற்றுவிட்டாராம் சூர்யா. சம்பளத்திற்கு பதிலாக தமிழ் பட உரிமையை வாங்கி வைத்திருந்தார் இவர்.
அதிகார பீடத்தின் முக்கிய நபராக விளங்கும் துரை தயாநிதி ரத்தசரித்திராவை வாங்கியிருப்பதால் சர்ச்சையை கிளப்புகிற ஜென்ட்டில்மேன்கள் காலர் கசங்காமல் ஒதுங்கிக் கொள்வார்கள் என்று யூகிக்கிறது திரையுலகம்.
|