|
அஜீத்தும் ரஜினியும் 'இப்பிடி..' (இதை வாசிக்கும்போது இரண்டு கை விரல்களையும் இறுகக் கோர்த்துக் கொள்ளவும்) என்பது திரையுலகத்திற்கு மட்டுமல்ல, சாதாரண ரசிகர்களுக்கு கூட தெரியும். ரஜினி சொன்னால் அஜீத் கேட்பார், அது எதுவாக இருந்தாலும்! அந்தளவுக்கு அவரை நம்பும் தல, சூப்பர் ஸ்டாரின் அட்வைஸ் கேட்டு ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கன்னடத்தில் வெளிவந்து பெரும் கலெக்ஷனை அள்ளிய படம் ஆப்தமித்ரா பார்ட் 2. இது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம். இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும். அதிலும் ரஜினியே நடிக்க வேண்டும் என்பது பி.வாசுவின் விருப்பம். இதற்காக ரஜினியிடம் அவர் பேசிக் கொண்டேயிருக்கிறார் பல மாதங்களாக! சென்னையில் ஒரு 'ப்ரிவியூ' ஏற்பாடு செய்து அதை ரஜினியையும் பார்க்க வைத்தார். படத்தை பார்த்த ரஜினி பி.வாசுவை கட்டி தழுவி பாராட்டிவிட்டு காரேறி போய்விட்டார். இந்த நிலையில்தான் அஜீத்தை அழைத்து இதில் நீங்க நடிச்சா பெரிய ஹிட் ஆகும். உங்களுக்கும் நல்ல பேர் கிடைக்கும் என்றாராம்.
'மங்காத்தா' படத்திற்கு பிறகு பில்லா-2 ல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஜீத், சந்திரமுகி-2 ல் நடிக்கப் போகிறார் என்பதுதான் கோடம்பாக்கத்தில் சூறாவளியாக சுற்றிவரும் செய்தி!
|