|
வரலாற்று குறிப்புக்கு உதவுகிற ஒரு பிளாஷ்பேக்... எழுத்தாளர் ஜெயகாந்தனின் இல்லத்திருமணம். அழைப்பிதழ் கொடுக்க இசைஞானி இளையராஜா வீட்டுக்கு போகிறார். அழைப்பிதழை படித்த ராஜா, “அடடா, கல்யாணத்தை அங்கே வச்சிட்டீங்களா? என்னால அந்த வாசப்படிய மிதிக்க முடியாதே! நான் வர மாட்டேன்”னு சொல்ல, “சரி... வரலைன்னா போங்க. வராதவங்களுக்கு எதுக்கு அழைப்பிதழ்”னு அவரது கையிலே இருக்கிற அழைப்பிதழை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு நடையை கட்டுகிறார் ஜெயகாந்தன். “அந்த வாசப்படிய மிதிக்க மாட்டேன்“னு இளையராஜா சொன்னது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சொந்தமான பொன்மணி கல்யாண மண்டபத்தை!
நாதமும், மூச்சுமாக இருந்த இந்த பிரமாண்டங்கள் பிரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இடையிலே இருவரையும் ஒட்டவைக்க எவ்வளவோ முயற்சிகள். ஆனால் எல்லாமே தோல்வியில்தான் முடிந்தன. முதல் தலைமுறை முறைத்துக் கொண்டால் கூட, அடுத்த தலைமுறை வணங்க தயாராக இருப்பதற்கு நாம் சொல்லப் போகும் செய்தி ஒரு உதாரணம்.
வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். திரைப்படங்களுக்கு பாட்டெழுத ஆசையில்லை. ஆனால் கேட்டால் மறுப்பதற்கில்லை என்பது அவரது கொள்கை. சரி என்று சம்மதித்தவருக்கு இன்னொரு அதிர்ச்சி. படத்திற்கு இசை இளையராஜா.
ஆனாலும் இரு தரப்பும் இதற்கு இசைவு தெரிவித்ததால் பாட்டுக்கு மெட்டு போடுகிற வேலை நடந்து வருகிறது. பொன்னை வைக்கிற இடத்திலே ஒரு பிடி மண்ணையாவது வைங்க சாமி ரெண்டு பேரும்!
-ஆர்.எஸ். |