|
மஹதீரா என்ற தெலுங்கு படம் கரண்ட் ஷாக் போல் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியுள்ளது. நிஜமாகவே இந்த படம் ஓடும் தியேட்டரில் மின்சார ஒயர் அறுந்து விழுந்து டிக்கெட் கவுன்ட்டரில் நின்றிருந்த ரசிகர்களில் சிலர் மரணமுற்றார்கள். ஏராளமான பிரிண்டுகள் போடப்பட்டிருக்கும் இந்த படம் தமிழக-ஆந்திரா எல்லை பகுதியான நகரியிலும் திரையிடப்பட்டது. (இங்குதான் தெலுங்கு தேசம் சார்பாக நடிகை ரோஜா தேர்தலில் போட்டியிட்டார்) இதனால் அங்கிருக்கிற மற்ற தியேட்டர்களில் காத்தாடியது. எல்லா ரசிகர்களும் மஹதீராவுக்காக முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆச்சர்யம் என்னவென்றால் இங்கு வசிக்கும் மக்களில் பலர் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பேசுகிற வழக்கம் உடையவர்கள். அதனால் தமிழ் படங்களும் இங்கே திரையிடப்படுவது வாடிக்கை. மஹதீராவின் கூட்டத்தை பார்த்த தமிழ் பட விநியோகஸ்தர்கள் தமிழின் முன்னணி ஹீரோக்களின் படங்களையும் திரையிட்டு பார்த்தார்கள். கலெக்ஷன் உதட்டை பிதுக்கியதே தவிர, கல்லா நிரம்பியதாக தெரியவில்லை.
தீவிர கலந்தாலோசனைக்கு பின் விநியோகஸ்தர் இந்திரன் என்பவர் ஒரு படத்தை திரையிட்டார். அவ்வளவுதான், மஹதீரா காலி! மொத்த கூட்டமும் இந்த தியேட்டருக்கு ஒடிவந்தது. இதென்னய்யா ஆச்சர்யம் என்று கண்களை அகல விரித்தது நகரி. அப்படியென்ன பொல்லாத படத்தை போட்டார் விநியோகஸ்தர்?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘அடிமைப்பெண்!’
பின்குறிப்பு- பழைய எம்.ஜி.ஆர் படங்களை இப்போது டிஜிட்டலில் மாற்றி வருகிறார்கள். சவுண்டும் டி.டி.எஸ் செய்யப்பட்டு வருகிறது. இப்படி செய்யப்பட்ட முதல் படமும் அடிமைப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஆர்.எஸ்.அந்தணன் |