ஒரு காலத்தில் தமிழ்சினிமாவின் மும்மூர்த்திகளாக இருந்த பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா மூவரும், திடீரென்று கை நழுவி விழுந்த கண்ணாடி பாத்திரமாகி போனார்கள்.ஒட்டுமொத்த தமிழினத்தையே தாலாட்டி வந்த இந்த கூட்டணி, மீண்டும் இணையாதா என்ற ஏக்கம் இன்னமும் தொடர்கிறது. இந்த மும்மூர்த்திகளை எங்கு சந்திக்க நேர்ந்தாலும், 'உங்களுக்குள் இருக்கும் கசப்பை மறந்துவிடுங்களேன்' என்று தவிக்கிற ரசிகர்களுக்கு கொஞ்சமாவது ஆறுதலை கொடுக்கும் பின்வரும் செய்தி.
ஷங்கரின் தயாரிப்பில் தாமிரா இயக்கிவரும் 'இரட்டைச்சுழி' படத்தில் வைரமுத்து ஒரு பாடல் எழுதப் போகிறாராம். இளையராஜாவின் மூத்த புதல்வர் கார்த்திக்ராஜாதான் இப்படத்தின் இசையமைப்பாளர். வைரமுத்துவின் இந்த வரிகளுக்கு இசைஞானி இளையராஜாவை பாட வைக்கலாம் என்று தாமிரா சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட கார்த்திக் ராஜா அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.
இதற்கு இளையராஜா ஒப்புக் கொள்வாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இரட்டைச்சுழி பட இயக்குனர் தாமிராவின் பெயர் காரணம் அறிந்தால், மனசுக்குள் ஆயிரம் தாமரை மொட்டுகள் பூக்கும்! தாவூத் என்ற இவரது பெயரில் கொஞ்சத்தை எடுத்து இவரது காதலி பெயரான மீராவுடன் இணைத்து தாமிரா ஆகிவிட்டார். அட, இந்த கதையே நல்லாயிருக்கே!
-ஆர்.எஸ். |