உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் அறிமுகம் ஆன வினய், தமிழ்சினிமாவின் சாக்லெட் பாய்களுக்கெல்லாம் எதிர் வினை ஆகியிருக்கிறார். நல்ல காதல் கதைகளோடு வருகிற புது இயக்குனர்கள் முதலில் ஃபோன் போடுவது வினய்க்குதான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'ஜெயம் கொண்டான்' ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனி போட்டதும் இன்னொரு காரணம். கன்னட வரவு என்றாலும், தமிழுக்குதான் வினயின் முதல் மரியாதை. ஏனென்றால் இங்குதான் இந்தியாவே வியக்கக் கூடிய இயக்குனர்கள் இருக்காங்க. மணிரத்னம், ஷங்கர் எல்லாம் என்னோட ஃபேவரைட் டைரக்டர்கள். கூப்பிட மாட்டாங்களான்னு காத்திருக்கேன் என்கிறார் வினய்.
ஆனால் அழைத்தது மணிரத்னம், ஷங்கர் அல்ல. கதிர்! ஒரு காலத்தில் இதயம், காதலர் தினம் போன்ற பிரமாண்ட படங்களை எடுத்தவர். காதல் வைரஸ் என்ற படத்தை எடுத்து வைரஸ் அட்டாக் ஆகி, சினிமாவிலிருந்தே ஒதுங்கியிருந்தவர், மீண்டும் பழைய புத்துணர்ச்சியோடு வரப் போகிறார்.
வெறும் காதலை மட்டுமே நம்பி படங்களை இயக்கி வந்த கதிர், முதன் முதலாக கொஞ்சம் ஆக்ஷனையும் கலந்திருக்கிறாராம். அதற்கு ஏற்ற மாதிரி ஓங்கு தாங்கான உடம்பும் வினய்க்கு இருப்பதால், கதிரின் இந்த முயற்சிக்கு நிச்சய வெற்றி என்கிறது கோடம்பாக்கம். ஒரு ஆச்சர்யம். வந்த புதிதில் தமிழை தள்ளி நின்றே கவனித்த வினய், இப்போது திக்கி திணறி பேசவும் ஆரம்பித்திருக்கிறாராம். வால்க தமிளு!
-கோவிந்து |