பறந்து பறந்து அடிக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களையே பதற வைக்கிறது, கோடம்பாக்கத்தில் நிகழ்ந்து வரும் நிஜ ஃபைட்டுகள்! தனது வீட்டின் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் என்கிறார் வடிவேலு. எங்கள் மீது வேண்டுமென்றே போடப்பட்ட பொய் வழக்கு என்கிறார்கள் விஜயகாந்த் தரப்பினர். என்னதான் நடக்கிறது இவர்களுக்குள்?
கடந்த வருடம் வடிவேலு அலுவலகத்தின் முன் காரை நிறுத்திய விவகாரத்தில் விஜயகாந்த் தொண்டர்களுக்கும், வடிவேலுவுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையும் துவங்கியிருக்கிறது. விசாரணைக்காக 22-ந் தேதி நீதிமன்றம் செல்லவிருக்கிறார் வடிவேலு. இந்நிலையில், 21-ந் தேதி வடிவேலு வீடு மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். வந்தவர்கள் சும்மா போகாமல், 'அஜீத் வாழ்க' என்று கோஷமிட்டதுடன், தங்களது பைக்கில் 'தல'யின் படத்தையும் பெரிதாக மாட்டி வைத்திருந்தார்களாம். மாலை நாளிதழ்களில் இந்த விஷயம் செய்தியாக வர, பதறிப் போன அஜீத் தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவை அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் அளிக்க வைத்தார்.
வந்தது வந்தோம். அப்படியே பக்கத்து தெருவில் இருக்கும் வடிவேலு ஆபிசிலும் இரண்டு கல்லை வீசிவிட்டு போவோமே என்று நினைத்த கலவர கண்மணிகள், அங்கேயும் தனது கடமையை சரிவர செய்துவிட்டு எஸ்கேப் ஆனார்கள். எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது.
'ஒரு கல்லு மூஞ்சிக்கு நேரா வந்திச்சுண்ணே, இவங்களாலே என் பிள்ளை குட்டிகளோட உசிருக்கும் ஆபத்துண்ணே...' என்றார் வடிவேலு தனது கைப்புள்ளை முகத்தோடு! ஒரே ஒரு தொகுதியில் ஜெயிச்சதுக்கே இப்படின்னா, இன்னும் பத்து இடத்திலே ஜெயிச்சிருந்தா என்னாகிறது நாடு என்று விஜயகாந்தை நேரடியாக வம்புக்கிழுக்கும் வடிவேலு, அடுத்தடுத்து வெளிப்படுத்திய ஆத்திரம்தான் தமிழனை கிலி பிடிக்க வைக்கிறது. விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்னாலும் அவரை எதிர்த்து நிப்பேன். மக்கள் செல்வாக்கு அவருக்கா? எனக்கா? பார்ப்போம் என்றார்.
நேரடியாக விருகம்பாக்கம் காவல் நிலையம் சென்ற வடிவேலு, விஜயகாந்த் தூண்டுதலின் பேரில் நடந்த தாக்குதல் இது என்று புகார் கொடுத்தார். சில மணி நேரங்களில் விஜயகாந்த் உள்ளிட்ட முப்பது பேர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. வடிவேலு வீட்டுக்கு படையெடுத்த நிருபர்கள், அப்படியே விஜயகாந்த் வீட்டுப்பக்கமும் எட்டிப்பார்க்க, அவர்களை வரவேற்றது கதவில் தொங்கிய பலமான பூட்டு!
கரையோரமா நின்னாலே தண்ணியிலே தள்ளிவிடும் ஊரு இது! குளிக்க ஆசைப்படும் வடிவேலுவை விடவா போகிறார்கள்?
-ஆர்.எஸ் |