இதுவரை எத்தனையோ படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், எந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் தனது அம்மாவை அழைத்த வந்ததில்லை ஏ.ஆர்.ரஹ்மான். சக்கரக்கட்டி விழாவுக்கு அம்மாவோடு வந்தது மட்டுமல்லாமல், அவரை மேடையில் ஏற்றியும் சந்தோஷப்பட்டார். இந்த சந்தோஷம் இன்னும் அதிகமாகி, தனக்கு வேண்டிய நண்பர்கள் பலரிடமும் ஒரு பாடலை இப்படிதான் படமாக்க வேண்டும். அவ்வளவு அற்புதமாக படமாக்கியிருக்கிறார் கலா பிரபு என்று கூறி வருகிறாராம்.
இந்த ஒரு சந்தோஷம் போதும். என் மகன் பெரிய இயக்குனர் ஆகிவிட்ட மாதிரியே ஃபீல் பண்ணுகிறேன் என்கிறார் தயாரிப்பாளர் தாணு. இந்த கலாப்பிரவு தாணுவின் வாரிசு என்பதை சொல்ல வேண்டுமா என்ன? ஒரு முறை பாக்யராஜிடம் கேட்டாராம் தாணு. "நீங்கள் நினைத்தால் ஷங்கர், மணிரத்னம் என்று உங்கள் மகனை பெரிய இயக்குனர் படங்களில் அறிமுகப்படுத்தியிருக்க முடியும். ஆனால், என் மகனிடம் எதை நம்பி ஒப்படைத்தீர்கள்" என்றாராம். அதற்கு பாக்யராஜ் என்ன சொன்னார்?
"இந்த பையன் எங்கிட்ட கதை சொல்லும் போது, இதில் பத்து சதவீதத்தை திரையில் காட்டினாலே இந்த படம் ஹிட் ஆகும்னு நினைச்சேன். ஆனால் சொன்னதை விட, பத்து மடங்கு அதிகமாக திரையில் காட்டியிருக்கிறார். நிச்சயம் இந்த படம் ஹிட்" என்றாராம்.
கேட்கும்போதே சக்கரக்கட்டியாக இனிக்கு இன்னொரு செய்தி. படத்தின் பாடல் காட்சிகளை மட்டுமே பார்த்துவிட்டு முன்னணி நிறுவனங்கள் சில, கலா பிரபுவுக்கு அட்வான்ஸ் கொடுக்க முன் வந்திருக்கிறதாம்.
-ஆர்.எஸ். |