ஒவ்வொரு மணித்துளிகளையும் காஸ்ட்லியான கரன்சியாக்கிக் கொண்டிருக்கும் வடிவேலு, வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். 'ஏண்ணே, வாய்தா வாங்கியிருக்கலாமே?' என்று வக்கீலே சொன்னாராம். ஆனாலும், நீதிபதியை பார்த்து ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு கிளம்பியிருக்கிறார் வைகைப்புயல்.
தனது அலுவலகத்திற்கு எதிரே காரை நிறுத்திய விவகாரத்தில் விஜயகாந்த் தொண்டர்களுடன் மல்லுகட்டினார் வடிவேலு. பதிலுக்கு இவரது ஆபிசை கற்களை கொண்டு தாக்கியது கேப்டன் குரூப். இரு தரப்பினரும் முண்டா தட்டிக் கொள்ள, காவல் நிலையமே கலவர நிலையமானது. இந்த வழக்கில் ஆஜராகதான் வந்திருந்தார் வடிவேலு.
ஆனால் எதிர்தரப்பு ஆட்கள் யாரும் வராததால் வழக்கை இம்மாதம் 15-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. வடிவேலு நீதிமன்றத்திற்கு வருவது இது இரண்டாவது முறை. பத்திரிகை ஒன்றின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கும் வடிவேலு, சில வருடங்களுக்கு முன் நீதிமன்றம் வந்திருந்தார். அப்போது நீதிபதியே வடிவேலுவை பார்த்து 'நான் உங்க படத்தை தொடர்ந்து பார்க்கிறேன். நீங்க இன்னும் நிறைய கருத்துக்களை படங்களில் சொல்லணும்' என்று கேட்டுக் கொண்டார். 'ஆகட்டும்யா...' என்று அதை ஏற்றுக் கொண்டார் வைகைப்புயல். அதையடுத்து இப்போதுதான் கோர்ட்டுக்கு வர நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது வடிவேலுவுக்கு.
-ஆர்.எஸ் |