மழைக்கு கூட தியேட்டர் பக்கம் அதிக நாட்கள் ஒதுங்கியதில்லை ஜெய் ஆகாஷின் படங்கள். இத்தனைக்கும் சுமாருக்கும் மேல், சூப்பருக்கும் கீழ் என்கிற மாதிரியான பர்சனாலிடி உடையவர் ஆகாஷ். யாரும் கொடுக்காத ஹிட்டை தானே எடுத்துக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்? ஆகாஷ் புத்திசாலி! 'காதலன் காதலி' என்ற படத்தை இவரே இயக்கி, இவரே நாயகனாக நடிக்கிறார்.
“இதுவரைக்கும் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலேயும் சேர்த்து 36 படங்களில் நடிச்சிட்டேன். நாமளே டைரக்ட பண்ணலாம்னு தோணுச்சு. தெலுங்கில் நான் இயக்கிய படம் ஹிட். நண்பர்கள் எல்லாரும், நீயே உன் படத்தை டைரக்ட் பண்ணேன்டா என்றார்கள். நான் சொல்லும் கதைகளை பாரபட்சமில்லாமல் விமர்சனம் செய்யும் என் பிரண்ட்ஸ், இந்த கதையை கேட்டுட்டு ரொம்ப பாராட்டினாங்க. அதுக்கு பிறகுதான் காதலன் காதலி படத்தை தைரியமாக எடுக்க வந்திருக்கேன்.நிச்சயம் இந்த படம் இதுவரைக்கும் வந்த என் படங்களை விட பெஸ்ட்டாக இருக்கும். அதுக்கு பிறகு வெற்றி அவன் கையில் இருக்கு” என்கிறார் வானத்தை பார்த்து.
படத்தில் இவருக்கு மூன்று காதலிகள். மூன்று பேருமே இவரை போட்டி போட்டுக் கொண்டு காதலிக்கிறார்கள். யாருக்கு இவர் வாழ்க்கை தருகிறார் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக சொல்லப் போகிறாராம். “சத்தியம் பண்ணி சொல்றேன். இந்த படத்தில் நான் வைத்திருக்கும் க்ளைமாக்ஸ் எல்லாரையும் உருக வைக்கும். மிரள வைக்கும்” என்கிறார் ஜெய் ஆகாஷ்.
ஜெய்யுக்கு ஒரு ஜே போடுங்ணா..!
-ஆர்.எஸ். |