அறிமுக நாயகிகள் யாருக்குமே கிடைக்காத ஆசிர்வாதம் புதுமுகம் ஜோஸ்னாவுக்கு கிடைத்திருக்கிறது. ‘மறுபடியும் ஒரு காதல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகும், இந்த நடிகையின் அம்மா சரோஜா, ரஜினியுடன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒன்றாக படித்தவராம். போயஸ் கார்டனில் அமைந்துள்ள ரஜினி வீட்டுக்கு தனது மகளுடன் போன அம்மா, அங்கே காலில் விழுந்து ஆசி பெற வைத்தாராம் மகளை! ‘நாங்க இருக்கோம், பார்த்துக்கிறோம்’ என்றாராம் சூப்பர் ஸ்டார்.
வேதா என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆன வாசு பாஸ்கர், பிரமோஷன் பெற்று இப்படத்தின் இயக்குனராகவும் ஆகியிருக்கிறார். அனிருத் என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்துகிறார் வாசு. தமிழுக்குதான் இவர் புதுசே தவிர, மலையாளத்தில் சில படங்களில் நடித்தவர். அனிருத்துக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் ஜோஸ்னா. மற்றவர், வாணி கிஷோர். பிரபல மாடல் என்கிறார்கள் இவரை. இலங்கை பெண்ணுக்கும், இந்திய வாலிபனுக்கும் இடையே ஏற்படுகிற காதலையும், அதன் விபரீதங்களையும் சுவைபட சொல்லப் போகிறாராம் வாசு பாஸ்கர். இலங்கை சம்பந்தப்பட்ட படம் என்றால், ‘உங்கள் அன்பு அறிவிப்பாளர்’ பி.எச்.அப்துல் ஹமீது இல்லாமலா? இப்படத்தில் முக்கிய வேடத்தில், அதுவும் வானொலி அறிவிப்பாளராகவே நடிக்கிறாராம் ஹமீது.
துவக்க விழாவுக்கு ரஜினி வரப்போகிறார் என்று யாரோ கொளுத்திப் போட, வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். ஆனாலும், கடைசிவரைக்கும் வரவேயில்லை ரஜினி.
-ஆர்.எஸ்.அந்தணன் |