திண்டுக்கல் பூட்டு, திருப்பாச்சி அருவாள் மாதிரி, திருநெல்வேலிக்கு பெருமை சேர்க்கப் போகிறார் நமீதா. இங்குதான் நமீதாவின் கோவில் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களின் இந்த ஏகோபித்த ஆசைக்கு ‘எஸ்’ சொல்லிவிட்டாராம் நமீ.
குஷ்புவின் காலம் முடிந்து நமீதாவின் காலம் நடக்கும் இந்த இடைபட்ட காலங்களில் ஒரு நடிகைக்கும் கிட்டாத இந்த வாய்ப்பு நமீதாவுக்கு கிடைத்தது ஒருபுறம் இருக்கட்டும். இயக்குனர்களில் ஒரு சிலரே நமீதாவின் ரசிகர்களாக இருப்பதுதான் ஆச்சர்யம். ரசனை கொஞ்சம் ஓவர் ஆகி, நமீதாவின் அறிமுக காட்சிக்காகவே ஒரு தனி பாடலை உருவாக்குகிற அளவுக்கு போயிருக்கிறார் ஒரு இயக்குனர்.
‘இந்திரவிழா படத்தில் நமீதாவின் நடிப்பையும் பார்ப்பீங்க’ என்று தனது பேட்டிகளில் கூறிவரும் டைரக்டர் ராஜேஷ்வர், படத்தின் நாயகனே வெறுத்துப் போகிற அளவுக்கு நமீதாவின் காட்சிகளை கூட்டிக் கொண்டே போகிறார். தனது முக்கியத்துவம் குறைக்கப்பட்டு நமீக்கு முக்கியத்துவம் கிடைப்பதால் சற்றே வாடிப் போயிருக்கிறாராம் ஹீரோ. இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு தனிப்பாடல் வைத்து ஒட்டு மொத்த யூனிட்டையும் கதிகலங்க வைத்திருக்கிறார் ராஜேஷ்வர். இதுவே படத்தின் டைட்டில் பாடலாகவும் அமைந்திருக்கிறதாம்.
அதிருக்கட்டும்... உங்க கோவிலில் ஆடி மாசத்திலே, கூழ் ஊத்துவாங்களா?
-மனஸ்வினி |