புதுமுகங்கள் நடிக்கிற படம் ஒன்றிற்கு இத்தனை கூட்டமா? சத்யம் திரையரங்கமே கூட்டத்தில் விழிபிதுங்க, வெகு விமரிசையாக நடந்தேறியது வெண்ணிலா கபடிக்குழு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. சிறப்பு அழைப்பாளர்களில் முக்கியமான இருவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும், விக்கு வினாயகராமும்! உலகம் வியக்கக் கூடிய கடம் வித்வான் இந்த விக்கு வினாயகராம்.
80 ம் வருடங்களில் கபடிக்குழு ஒன்றின் கேப்டனாக இருந்தவராம் டைரக்டர் சுசீதரனின் அப்பா. தந்தையின் கனவையும், உழைப்பையும் நேரில் பார்த்து இதயத்தில் குறித்துக் கொண்ட மகன் சசீதரன், இந்த கதையையே தனது முதல் படமாக எடுத்திருக்கிறார்.
இப்படத்தின் இசையமைப்பாளர் செல்வகணேஷ், வினாயகராமின் இசை வாரிசு. "வினாயகராம் குடும்பமே ஒரு ஞானக்குடும்பம். அவரது வீட்டிலிருந்து இந்திய சினிமாவுக்கு ஒரு அருமையான மியூசிக் கம்போசர் கிடைச்சிருக்கார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்றார் ஏ.ஆர்.ரஹ்மான். விழா நடந்த தினமான அக்டோபர் 2 ந்தேதி, காந்தி ஜெயந்தி என்பதால், காந்தியின் கொள்கைகளை நினைவூட்டினார் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராம.நாராயணன். "இந்தியாவின் இதயம் கிராமங்களில்தான் இருக்கிறது என்றார் மகாத்மா காந்தி. சமீபத்தில் வந்து தமிழ்சினிமாவில் பெரும் வெற்றி பெற்ற படங்களும் கிராமத்து கதைகளை உள்ளடக்கியவைதான். பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் வரிசையில் இந்த வெண்ணிலா கபடி குழு படமும் இடம்பிடிக்கும்" என்றார். சீயான் விக்ரம், டைட்டிலுக்கு பொருத்தமாக கபடி கபடி கபடி... என்று பாடியபடியே தனது உரையை முடிக்க, அரங்கத்தில் விசில் சத்தம் காதை பிளந்தது.
இவ்வளவு பேர் வந்திருந்தாலும், படத்தின் நாயகி சரண்யா மோகன் வராதது ஒரு குறையாக இருந்துவிடக் கூடாது என்பதால், அவர் வேறொரு படப்பிடிப்பில் இருப்பதால் வரவில்லை. வாழ்த்துக்கடிதம் அனுப்பியிருக்கிறார் என்றார்கள்.
-ஆர்.எஸ். |