கேரளா மாநிலம் மலப்புரத்தை அடுத்த மஞ்சேரி என்ற ஊரில் 1919-ம் ஆண்டு மார்ச் மாதம் 7ந் தேதி பிறந்தவர். இவரது இயற்பெயர் நாராயணன் நம்பியார். ஊர்ப்பெயரையும் சேர்த்து எம்.என்.நம்பியார்(மஞ்சரி நாராயணன் நம்பியார்) என்று அழைக்கப்பட்டு வந்தார்.
தனது 8 வது வயதில் நம்பியார் ஊட்டியில் டீ கடை நடத்தி வந்த தனது சகோதரியின் கணவர் வீட்டுக்கு வந்தார். அங்கேயே பள்ளிக்கூடத்தில் சேர்ந்து 5வது வகுப்பு வரை படித்தார்.
சகோதரியின் குடும்பத்துக்கு பாரமாக இருக்க விரும்பாத அவர். தனது 13வது வயதில் சென்னை வந்து நவாப் ராஜா மாணிக்கத்தின் நாடக கம்பெனியில் சேர்ந்தார். சின்ன சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கிய அவருக்கு, அந்த நிறுவனத்தின் 'பக்த ராமதாஸ்' நாடகம் 1935-ம் ஆண்டு இந்தியிலும், தமிழிலும் சினிமாவாக தயாரிக்கப்பட்ட போது நம்பியாருக்கும் அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் சினிமாவில் அடி எடுத்து வைத்து முதல் படத்தின் மூலம் பெற்ற சம்பளம் 40 ரூபாய்.
பின்னர் படிப்படியாக பல படங்களில் நடிக்க தொடங்கினார்.அவர் எம்.ஜி.ஆருடன் நடிக்க தொடங்கிய போது அவரும் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து புகழ் பெறத் தொடங்கினார்.எம்.ஜி.ஆருடன் அவர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, தாய் சொல்லை தட்டாதே, சர்வாதிகாரி, பரிசு, படகோட்டி, உலகம் சுற்றும் வாலிபன், விவசாயி, எங்கள் தங்கம், உரிமைக் குரல், பல்லாண்டு வாழ்க, புதிய பூமி, போன்ற படங்கள் அவரது நடிப்பு பெண்களுக்கு வெறுப்பை தந்தாலும் நம்பியாருக்கு புகழை தேடித் தந்தன. எம்.ஜி.ஆருடன் மட்டும் 75 படங்களில் நடித்தவர்.
சினிமாவில் வில்லன், ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்பாவி, மிகவும் பக்திமான். மது, மாமிசம், புகை பழக்கம் இல்லாத, சுத்த சைவ உணவை உண்டு வந்து இருக்கிறார். சினிமா உலகில் இப்படி ஒருவரை பார்ப்பது அரிது என்று இன்றைக்கும் பேசப்படுகிறார்.அத்துடன் மிகுந்த நகைச்சுவை உணர்வும் அவருக்கு உண்டு.
சிறந்த அய்யப்ப பக்தரான நம்பியார் 65 ஆண்டுகள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வந்துள்ளார். நீண்ட காலமாக 'குருசாமி' யாக பக்தர்களை அய்யப்பன் கோவிலுக்கு வழி நடத்திச் சென்று வந்தவர். இவரது நீண்ட அய்யப்பன் கோவில் பயணம் அவரை மகா குருசாமி என்ற பட்டத்தை பெற்று தந்தது.
கோவிலுக்கு இருமுடி கட்டும்போது அவரது மனைவி ருக்மனி தான் நெய் தேங்காயில் நெய் ஊற்றி தொடங்கி வைப்பார்.
அதே போல எம்.ஜி.ஆர். மரணம் அடையும் வரை நம்பியார் இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு செல்லும்போது எம்.ஜி.ஆர். அனுப்பி வைக்கும் மாலைதான் முதல் மாலையாக அவருக்கு அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வந்தது.
கடந்த ஒரு ஆண்டாக உடல் நலம் பாதிப்பு மற்றும் முதுமை காரணமாக அவர் அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. அய்யப்ப சாமிக்கு விரதம் மேற்கொள்ளும் இந்த கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்தது. அய்யப்ப சாமி திருவடிகளை அவர் அடைந்து இருப்பதாக அய்யப்ப பக்தர்கள் தெரிவித்தனர். |