கான்கிரீட் போட்டு மூடினாலும், கையை வெளியே நீட்டி சிரிக்கும் உண்மை! கவுதம்- ஹாரிஸ் பிரச்சனையில் என்னதான் சொல்கிறது இந்த உண்மை? சுப சுரமாக ஒலித்த இருவரின் நட்பை கோடரியால் வெட்டி அபஸ்வரம் எழுப்பியது வேறு எதுவும் இல்லை. பணம் பணம் பணம்...!
தமிழ்சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மட்டுமே. சுமார் ஒன்றேகால் கோடி வாங்கும் ரஹ்மானைவிட, ஹாரிசுக்கு சம்பளம் அதிகம். வருடத்திற்கு நான்கே படங்கள்... போதும் என்ற பொன் செய்யும் மனசு ஹாரிசுக்கு. அதுமட்டுமல்ல, ஒரு படத்திற்கு அட்வான்ஸ் வாங்கும் முன் இவர் எடுத்துக் கொள்ளும் கால அளவுகள் அதிகம் என்கிறார்கள். முதலில் டைரக்டரை வரச்சொல்லி கதை கேட்பார். அது பிடித்திருந்தால், தினமும் தனது ஸ்டுடியோவுக்கு வரச் சொல்லி நட்பை வளர்ப்பார். அதன்பின் தனக்கும் அவருக்குமான அலைவரிசை ஒத்துப் போனால், கம்போசிங்கில் அமர்வார்கள். பிறகுதான் அட்வான்ஸ் வாங்குவாராம் தயாரிப்பாளரிடமிருந்து. இதற்குள் நாலைந்து மாதங்கள் ஒடிவிடும். இடையிலேயே டைரக்டருக்கும் இவருக்கும் ஒத்துப் போகாது என்று தெரிந்தால் ஸாரி சொல்லி விலகிவிடுவார். அட்வான்ஸ் வாங்கியிருந்தால்தானே கமிட் ஆவதற்கு?
ரெக்கார்டிங் சமயத்தில்தான் பாதி சம்பளத்தையே வாங்குவாராம். பண விஷயத்தில் அவசரம் காட்டாமலிருப்பதற்கு காரணம், ரீரெக்கார்டிங் முடிகிற வரைக்கும் படச்சுருள்கள் இவர் வசம்தானே இருக்கப் போகிறது. ரீல்களை எடுத்துச் செல்லும்போது மீதியை வாங்கிக் கொள்ளலாம் என்ற பெருந்தன்மை. ஆனால், கவுதம் மேனனை பொருத்தவரை அந்த நிபந்தனையும் போடுவது இல்லையாம் இவர். தனக்கு வரவேண்டிய பெரும் தொகையை கூட கேட்காமல் ரீல்களை எடுத்துக் கொடுத்துவிடுவாராம். இப்படி சேர்ந்த தொகையே கிட்டதட்ட ஐம்பது லட்சத்தை தாண்டும் என்கிறார்கள்.
இதை கேட்கப் போனபோது எழுந்த பிரச்சனைகள்தான் இந்த பிரிவுக்கு காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இப்போதும் ஹாரிஸ் சொல்வது என்ன தெரியுமா? நான் திரையுலகில் பெரிதும் மதிக்கிற என் நண்பர்கள் இருவர். ஒருவர் ஜீவா. மற்றவர் கவுதம். ஒருவர் திரும்ப வர முடியாத உலகத்திற்கு போய் விட்டார். இன்னொருவர் திரும்ப வந்தாலும், நட்பு பாராட்டுகிற எல்லையை தாண்டி போய்விட்டார்.
இனிமேல் புது இளைஞர்களுடன் தனது இசைப்பயணத்தை தொடர்கிற முடிவில் இருக்கிறாராம் ஹாரிஸ். அந்த புது உலகத்தில் ஒரு ஜீவாவும், கவுதமும் கிடைக்காமலா போய்விடுவார்கள்?
-ஆர்.எஸ்.அந்தணன் |