தனது ரசிகர்களுடன் சென்னை சேப்பாக்கத்தில் நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருந்தார். ஈழத்தமிழர்கள் மீது தொடுக்கப்படும் இனப்படுகொலையை கண்டித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சி, தாயார் ஷோபா சந்திரசேகர், மனைவி சங்கீதா மற்றும் ஏராளமான ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எங்கு, யார் போராட்டம் நடத்தினாலும், நேரில் சென்று ஆதரவு கொடுத்து வரும் தமிழர் தேசிய தலைவர் பழ.நெடுமாறன், மற்றும் சுப.வீரபாண்டியன், தா.பாண்டியன் ஆகியோர் விஜயின் இந்த உண்ணாவிரதத்திற்கும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
விஜய் பேசியதாவது-
இலங்கை பிரச்சனையை சின்ன வயது முதல் நானும் அறிந்து இருக்கிறேன். நீங்களும் அறிந்து இருப்பீர்கள். கடந்த இரண்டு மாதங்களாக பத்திரிகைகளிலும், டிவியிலும் வருகிற தகவல்களை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நம் ஊரில் விமானம் பறந்து போவதை பார்த்து சிறுவர், சிறுமிகள் உற்சாகத்துடன் கை தட்டுவார்கள். ஆனால் இலங்கையில் ஒரு விமானம் பறந்தாலோ, சிறுவர் சிறுமிகள் எல்லாரும் பயந்து பதுங்கு குழியில் போய் ஒளிந்து கொள்கிறார்கள். நம் வீட்டில் கல் விழுந்தால், கல் வீசியது யார்? என்று அதட்டி கேட்கிறோம். அங்கே வீடுகள் மீது குண்டு விழுகிறது. நம்மால் தட்டிக் கேட்க முடியவில்லை. இலங்கை தமிழர்கள் மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட வேண்டும். நிம்மதியாக உறங்க வேண்டும்.
இவ்வாறு பேசிய விஜய், நான்கு மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
-ஆர்.எஸ்
|