அரசாங்கம் படத்தின் ரிசல்ட்டை கேட்டு ஆனந்தமாக இருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் மாதேஷ். சுமார் 200 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கு. கேப்டனின் 150 வது படம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே சிரத்தை எடுத்துக் கொண்டோம். ஆறு வருடத்திற்கு முன்பு அவரை பார்த்து ஒரு கதை சொன்னேன். அவருக்கு பிடிச்சிருந்தது. ஆனால் உடனே ஆரம்பிக்க முடியாத நிலை. அதே கதை வேறொரு ஹீரோ நடித்து வெளிவந்து பெரிய வெற்றியும் பெற்றது. இப்போ அவரிடம் கதை சொல்ல போனபோது அதை குறிப்பிட்ட கேப்டன், நாம மிஸ் பண்ணிட்டோம் என்றார். அரசாங்கம் கதையை சொல்ல, கொஞ்ச நேரமே ஒதுக்கியிருந்த அவர், தொடர்ச்சியா ஐந்து மணி நேரம் கதையில் இன்வால்வ் ஆகி விவாதிக்க ஆரம்பிச்சார்.
கனடா வாழ் தமிழர்கள் எங்களுக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அவங்களுக்கு இந்த நேரத்திலே நன்றி சொல்லணும் என்ற மாதேஷ், தமிழகத்தில் முக்கியமான அரசியல் தலைவரான கேப்டனை வைத்து அரசியலே கலக்காம ஒரு படத்தை கொடுத்திருக்கேன்னா அதுக்கு காரணம் அவரோட பெருந்தன்மைதான் என்றார். முதலில் கதை கேட்டதோடு சரி. அதன்பின் ஒரு நாள் கூட, இதை சேருங்க. அதை சேர்க்காதீங்க என்று சொன்னதே இல்லை. இது உங்க படம். நீங்க என்ன செஞ்சாலும் சரின்னு சொல்லிட்டார். பொதுவாக கேப்டன் படப்பிடிப்பு என்றால் அவரது தொண்டர்கள் கூட்டமாக வருவாங்க. இதனால் படப்பிடிப்பு இடைஞ்சலா இருந்திச்சான்னு கூட பத்திரிகையாளர்கள் கேட்கிறாங்க. அவருடைய தொண்டர்கள் வருவதால் பாதுகாப்புதானே தவிர, இடைஞ்சல்களுக்கு இடமே இல்லை என்றார் மாதேஷ்.
இவர் சொல்வதை பார்த்தால் இவரது அடுத்த படத்திலும் விஜயகாந்த் தான் ஹீரோ போலிருக்கிறது. மாதேஷை பார்த்துவிட்டு அந்த கேள்வியை கேட்காமல் வந்தால், இந்த சமுதாயம் என்ன நினைக்கும்? கேட்டோம்.
எத்தனையோ படங்களை இயக்கியிருந்தாலும், சாக்லேட் படத்தில் வரும் மல மல மருதமலைன்னு மும்தாஜ் ஆடுற மாதிரி ஒரு பாடலை இன்னும் கொடுக்கலையே?
அது தானாவே அமையணும். ஆனாலும் நான் இயக்கிய மதுர படத்தில் விஜய் ஆடும் பாடல்கள் நல்லாதானே ஹிட் ஆச்சு என்கிறார். இதுக்கு பேருதான் சமாளிபிகேஷன் என்பார்களோ?
-ஆர்.எஸ்.அந்தணன்
|