ரித்திக், ஆதிரா நடிக்கும் புதிய படம் மாணவன் நினைத்தால். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட பேரரசு பெற்றுக் கொண்டார். தமிழகத்தில் பிறந்து மலையாளத்தில் முக்கிய இசையமைப்பாளராக திகழும் தக்ஷி என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சினிமா விழாவில் ஆன்மீகவாதிகள் கலந்து கொள்வது இப்போது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்த விழாவிலும் பல சிவனடியார்கள் மேடையேறினார்கள். அதற்கு காரணம், படத்தின் இசையமைப்பாளர் தக்ஷி எளிய தமிழில் உருவாகிக் கொண்டிருக்கும் திருவாசகத்திற்கு இசையமைத்து வருகிறாராம். அங்கு பாட வந்த வெண்கலக்குரல் சிவனடியார் ஒருவரை மாணவன் நினைத்தால் படத்திலும் பாட வைத்திருக்கிறார்.
இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றிலும் நடிக்கிறார் பாக்யராஜ். வழக்கம்போல் உற்சாக உரையாற்றினார் இவர். 16 வயதினிலே க்ளைமாக்சில் ஸ்ரீதேவியை டாக்டர் கெடுப்பது போல் முதலில் காட்சியை அமைத்திருந்தார் இயக்குனர் பாரதிராஜா. அதற்காக இளநீர் சீவுவது போலவும், அதில் ஓட்டை விழுவது போலவும் காட்சி அமைத்து எடுக்க நினைத்தார். ஆனால் ஸ்ரீதேவியை டாக்டர் கெடுக்காதது போல் படமெடுங்கள் என்று தயாரிப்பாளர் கூறிவிட்டார். இளநீர் சீவும் காட்சியெல்லாம் வீணாக போகிறதே என்று டைரக்டர் வருத்தப்பட்டார். அருகில் இருந்த நான், இளநீர் சீவுவது போல் காட்சி இருக்கட்டும். கடைசி வெட்டு விழும்போது கையிலிருந்த இளநீர் தவறி விழுந்து உருண்டோடுவது போலவும், அதே நேரத்தில் ஸ்ரீதேவி டாக்டரிடமிருந்து தப்பி வருவது போலவும் காட்சி வைத்துக் கொள்ளலாம் என்றேன். சந்தோஷத்துடன் அதை டைரக்டர் ஏற்றுக் கொண்டார்.
இப்படி கடைசிநேரத்தில் க்ளைமாக்ஸ் மாற்றப்பட்ட படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படத்திலும் கடைசி நேரத்தில் க்ளைமாக்ஸ் மாற்றப்பட்டிருக்கிறது. படம் வெற்றியடையும் என்று நம்புவதாக பாக்யராஜ் தெரிவித்தார்.
-ஆர்.எஸ்.
|