கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தனிக்காட்டு ராஜாவாக இருந்த கவிப்போரரசு வைரமுத்துவின் சாம்ராஜ்யத்தை லேசாக அதிர வைத்தார்கள் இளம் கவிஞர்கள். குறிப்பாக நா.முத்துக்குமார், சினேகன், யுகபாரதி, கபிலன் ஆகியோர். பாடல் எழுதுவதை ஜல்லிக்கட்டு போல சித்தரித்து வந்த பழமைவாதிகளுக்கு, அது ஆட்டுகுட்டி ஆட்டம்தான் என்பதை உணர்த்தினார்கள் இந்த இளைஞர்கள். ஆளுக்கொரு பாடல் கொடுத்தாலும் அழகாக எழுதுவோம் என்ற இந்த கவிஞர் படை ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் தரச்சான்றிதழை மேலும் மெருகூட்டியது.
ஆனால், படத்தின் எல்லா பாடல்களும் எனக்கே வேண்டும் என்று இந்த இளைஞர்களுக்கு போட்டியாகவும் காய் நகர்த்தி பார்த்தார் கவிப்பேரரசு. பிரமாண்ட இயக்குனர்களை தவிர, மற்றவர்கள் தங்கள் விருப்பத்தை இந்த இளைஞர்கள் பக்கம் திருப்பினார்கள். இந்த நிலையில், குட்டிகளுக்கு வழிகாட்ட வேண்டிய தாய் பறவை கோபத்தோடு முகத்தை திருப்பிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை.
கடந்த வாரம் தனது மகன் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்திய கவிப்பேரரசு, ஒரே துறையில் இருக்கும் இந்த இளம் பாடலாசிரியர்களுக்கு ஒரு அழைப்பிதழ் கூட அனுப்பவில்லையாம். இத்தனைக்கும் சினேகன் போன்ற சில பாடலாசிரியர்கள் வைரமுத்துவிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள். புத்தகங்களுக்கு அணிந்துரை வேண்டி வருபவர்கள் பலருக்கு வைரமுத்துவின் வார்த்தைகளிலேயே அணிந்துரை எழுதி தந்தவர் இந்த சினேகன்.
அழைத்திருந்தால் போயிருக்கலாம் என்கிறார்களாம் இவர்களில் சிலர்.
-ஆர்.எஸ்.அந்தணன் |