இளம்புயல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் பங்காற்றிய கலைஞர்களில் அநேகம் பேர் இலங்கை தமிழர்கள் என்பதால், அரங்கம் முழுவதும் தூய தமிழின் மணம்! படத்தின் இயக்குனர் கே.எஸ்.துரையின் வரவேற்புரையே பலரை கிறங்கடித்தது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, ஆடியோவை அமீர் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடு. முன்பாக பேசிய அமீர், 'வாழ்த்துகள்' என்று ஒரே வார்த்தையில் தனது உரையை முடித்துவிட, விழாவுக்கு வந்திருந்த பலருக்கும் அதிர்ச்சி.
பின்பு அவரை வற்புறுத்தி பேச வைத்தார் கே.எஸ்.துரை. 'நான் பேசவே கூடாது போலிருக்கிறது. கடந்த வாரம் ஒரு விழாவில் நான் சில கருத்துக்களை சொல்லப்போக, மறுநாளே எல்லா பத்திரிகைகளிலும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீர் கண்டனம் என்று கொட்டை எழுத்தில் போட்டுவிட்டார்கள். அதனால்தான் இந்த விழாவில் பேச வேண்டாம் என்று நினைத்தேன்' என்றார்.
'தமிழை நிஜமாகவே வாழ வைப்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான். உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் ஒரு படத்தில் பதிவு செய்யாமல் விடமாட்டேன்' என்றார் அமீர். இதை சொல்லும்போது சற்றே உணர்ச்சிவசப்பட்ட அவரை மேலும் உணர்ச்சிவசப்பட வைத்தது திரண்டிருந்த கூட்டத்தின் கைத்தட்டல்! 'இப்படியெல்லாம் எதையாவது பேசிவிடுவேன் என்பதால்தான் நான் பேசமாட்டேன்னு சொன்னேன்' என்றார் அமீர்.
திரையிடப்பட்ட சில பாடல்களில் ஒரு பாடல் மட்டும் தனி ஈழம் குறித்த கதாநாயகனின் கனவை சொன்னது. அந்த வரிகளும், படமாக்கப்பட்ட விதமும் சிலிர்ப்பு!
-ஆர்.எஸ்.அந்தணன்
|