விழாவுக்கு வராமல் போனது இத்தனை சர்ச்சையை கிளப்பும் என்று மூவருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பசுபதி, மீனா, நயன்தாரா ஆகியோர் கூட்டறிக்கை வெளியிடாத குறைதான்.
குசேலன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு மேற்படி நடிகர் நடிகைகள் வராதது குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் எழ, சம்பந்தப்பட்டவர்களை விட்டே மீடியாவிடம் பேச வைத்திருக்கிறார் பி.வாசு. கரிக்கெண்ட தங்கம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறாராம் மீனா. இதற்காக 27 ந் தேதியே ஐதராபாத் போய்விட்டேன். அதே நேரத்தில் குசேலனின் டப்பிங் வேலைகள் ஐதராபாத்திலேயே நடப்பதால் படப்பிடிப்பு முடிந்ததும் டப்பிங்கும் பேசி வருகிறேன். அதனால்தான் விழாவில் ஆப்சென்ட் என்று கூறியிருக்கிறார் மீனா.
ஏகன் படப்பிடிப்பில் இருந்ததால் வர இயலவில்லை என்று கூறுகிறார் நயன்தாரா. ஆனால், ஆடியோ ரிலீஸ் அன்று மாலைதான் படப்பிடிப்பே துவங்கினார்களாம். ஷ§ட்டிங் துவங்கி சில மணி நேரத்திலேயே அங்கிருந்து கிளம்பினால் நன்றாக இருக்காது என்பதால்தான் இவர் வரலில்லையாம்.
மூணாறில் சிக்கிக் கொண்டாராம் பசுபதி. வெடிகுண்டு முருகேசன் படப்பிடிப்பில் இருந்ததால்தான் தன்னால் வர இயலவில்லை என்று கூறியிருக்கிறார் அவர். ஆனால், ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தால் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளை அனுப்பி வைத்துவிட்டு, வேறு சீன்களை எடுப்பது வழக்கம்தான்! தமிழ்சினிமா படப்பிடிப்புகளில் பல முறை இவ்வாறு நடந்தும் இருக்கிறது. இவர்கள் சொல்லும் காரணங்கள் தற்போதைய பிரச்சனைக்கு போடப்படும் சின்ன பிளாஸ்திரிதான்! உள்ளே எத்தனை ரணம் இருக்குமோ, யார் அறிவார்?
-ஆர்.எஸ். |